புதுச்சேரியில் துக்க வீட்டில் நிகழ்ந்த கலவரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் டிரைவர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். வாகன ஓட்டுநரான ராஜ் கடந்த 21 ஆம் தேதி தேங்காய்திட்டு பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டுத் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது ராஜ் வாணவெடி வெடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் ஓட்டுநர் ராஜிக்கும் இடையே வாணவெடி வெடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இளைஞர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டை ஓட்டுநர் ராஜ் மீது வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் ஓட்டுநர் ராஜ் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை காவல் நிலைய போலீசார் ராஜியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நிர்மல், ஹரி மற்றும் வெடிகுண்டு தயாரித்து கொடுத்த லோக பிரகாஷ், மோகன்ராஜ், ரஞ்சித், ஐயப்பன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ராஜ் கலந்துகொண்ட இறுதிச் சடங்கில் வேல்ராம்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான நிர்மல், உழந்தை கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரி ஆகிய இரண்டு பேரும் கலந்து கொண்டுள்ளனர்.
அப்பொழுது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த ராஜியிடம் நிர்மல் மற்றும் ஹரி ஆகியோர் தாங்களும் பட்டாசு வெடிக்க வேண்டும் பட்டாசு கொடுங்கள் எனக் கேட்டுள்ளனர். ஆனால் ராஜ் பட்டாசு தர மறுத்ததோடு, 'சின்ன பசங்க எல்லாம் பட்டாசு வெடிக்கக் கூடாது' எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிர்மல், ஹரி இருவரும் அங்கிருந்த சக கூட்டாளிகளை அழைத்து வந்து ராஜியைக் கொலை செய்யத் திட்டமிட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்த லோக பிரகாஷ் என்பவரிடத்தில் கூறி நாட்டு வெடிகுண்டை அவசர அவசரமாகத் தயாரித்து ராஜ் மீது வீசி கொலை செய்தது தெரியவந்தது. இதில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.