தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிறக்கும் எல்லாருக்கும் எல்லாம் சமமாக கிடைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை; அதுதான் பிறப்புரிமை. அதனை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும் அதனை எதிர்ப்பதும், வீழ்த்துவதும், ஒடுக்குவதும் சுதந்திர மனிதர்களான நமது கடமை என்று நான் நினைக்கிறேன். இந்த நேரத்தில் அதனைப் பற்றி பேசியிருக்கின்ற உதயநிதி ஸ்டாலினுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும். அதன்படி நான் உதயநிதியுடன் நிற்கிறேன். இதை நான் சொல்வதற்கான காரணம் என்னவென்றால், இதுவரை நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்றவற்றில் இருந்து வாசிப்பு மூலமும், அறிவியல் மூலமும் விடுதலை கிடைக்கும் என்று நான் இந்த இடத்தில் சொல்கிறேன்” என்றார்.
இந்தியா பெயர் மாற்றம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த வெற்றிமாறன், “எனக்கு இந்தியா என்ற பெயரே போதுமானது; அதுவே சரியானதாகவும் இருக்கிறது” என்றார்.