
ஆவடியில் வீட்டில் சமையல் கேஸ் வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கலைஞர் நகர் பகுதியில் சங்கர் ராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு சங்கர் ராஜின் தாய் ரோஜா சமைப்பதற்காக கேஸ் சிலிண்டர் பற்ற வைத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். வீட்டில் சிக்கிக்கொண்ட தாய் ரோஜா, மகன் சங்கர் ராஜ் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாய் ரோஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.