
கரூரில் நடைபெற்ற ஆணவக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பட்டப்பகலில் கோவில்வாசலில் வைத்து ஹரிஹரன் என்ற இளைஞரை சரமாரியாக ஒரு கும்பல் தாக்கியது. தாக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தேடிவந்தனர். அதில் ஹரிஹரன் காதலித்த பெண்ணின் சித்தப்பா சங்கர், தாய்மாமன்கள் கார்த்திகேயன் மற்றும் வெள்ளைச்சாமி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைதுசெய்த நிலையில், பெண்ணின் தந்தை வேலன், இன்னொரு சித்தப்பா முத்து ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
அவர்களைப் பிடிக்க காவல்துறை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வெளியூருக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது காவல்துறையினர் இருவரையும் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.