Skip to main content

தொடர் விடுமுறை தினங்கள்; களைகட்டிய பிச்சாவரம்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

travellers celebrates in pichavaram mangrove forest 

 

சிதம்பரம் அருகே 15 கி.மீ. தூரத்தில் உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு கடற்கரை முகத்துவாரப் பகுதியாக உள்ள உப்பனாற்றில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 3,500 கால்வாய்களுடன் சுரபுன்னை மரங்கள் கொண்ட மாங்குரோவ் காடுகள் (சதுப்புநிலக்காடுகள்) அமைந்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை மரங்கள் 70 சதவீதம் உப்புநீர் 30 சதவிதம் நன்னீரில் வளரக்கூடியது. இது நாட்டின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக்காடுகள் ஆகும். இதனை வனத்துறையினர் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரித்து வருகின்றனர்.

 

கீழே தண்ணீரும், தண்ணீருக்கு மேலே பச்சைபசேல் என்று படர்ந்து காணப்படும் சுரபுன்னை மரங்களும் என இயற்கை எழில் மிகுந்து காணப்படும் இந்த மாங்குரோவ் காடுகளைப் படகுகளில் சென்று பார்வையிடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதைக் கண்டு மகிழ்வதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கிறார்கள்.

 

இங்கு கோடைக்காலங்களில் சீசன் களைகட்டும். அதே நேரத்தில் அரசினர் விடுமுறைக் காலங்களில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை என்பதால் கோடை சீசனில் வரும் சுற்றுலாப் பயணிகளைத் தாண்டி அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இவர்கள் குடும்பத்துடன் வந்து இயந்திர மற்றும் துடுப்புப் படகுகளில் படகு சவாரி செய்து மாங்குரோவ் காடுகளில் உள்ள கால்வாய்களுக்கு இடையே படகுகளில் சென்றபடி இருபக்கமும் வளர்ந்து நிற்கும் சுரபுன்னை மரங்களைப் பார்த்து மகிழ்ந்தனர்.

 

படகில் செல்லும் இவர்கள் சுரபுன்னை மரங்களின் வேர், இலை மற்றும் காய் ஆகியவற்றையும் வியப்புடன் ரசித்துப் பார்த்தனர். சுரபுன்னை மரங்களின் அருகில் படகுடன் நின்று புகைப்படம் மற்றும் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா மைய அலுவலகத்துக்கு அருகே அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி படகு சவாரி செய்த இடங்களைப் பார்த்து இயற்கையின் அழகை ரசித்தனர். ஊட்டி, கொடைக்கானல், கேரளாவின் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அதிக செலவு செய்து படகு சவாரி செய்ய முடியாதவர்கள், பிச்சாவரத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எங்களை காப்பாற்றுங்கள்” - ரஷ்ய ராணுவத்தால் கதறும் இந்தியர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Indian tourists shouts Save us from Russia

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. 

அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள். 

அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர். 

ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tourist vehicle overturns on mountain road More than 10 people injured

வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த 19 பேர் நேற்று மினி பேருந்தில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனையடுத்து ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்துவிட்டு ஏற்காட்டில் இருந்து சென்னை திரும்புவதற்காக இன்று மதியம் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்தில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்காடு மலையடிவாரத்தின் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே மினி பேருந்து வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி மினி பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விபத்தில்  சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் ஏற்காடு மலையடிவாரத்தில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.