Skip to main content

நீதிமன்றத்தை ஏமாற்றி மோசடி; இருவர் கைது; நீதிமன்ற ஊழியர் தலைமறைவு

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

cuddalore court judge complaint cash deposit issue 
குணாளன் - சிவதாஸ் - சத்யமூர்த்தி

 

கடலூர் முதன்மை சார்பு நீதிபதி அன்வர் சதாத் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், "கடலூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விபத்து தொடர்பான வழக்கில் மனுதாரர்களான லாவண்யா மற்றும் சரண்யா ஆகியோர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூபாய் 3 லட்சத்து 86 ஆயிரத்து 106 ரூபாயை  பாலூர் கனரா வங்கியில் வைப்பீடாக வைக்கப்பட்டது. அதேபோல் மற்றொரு விபத்து வழக்கிலும் மனுதாரர்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகை ரூபாய் 5 லட்சத்து ஆயிரத்து 482 ரூபாயை கடலூர் யூகோ வங்கியில் வைப்பீடாக வைக்கப்பட்டது.

 

கடந்த 2012 இல் லாவண்யா மற்றும் சரண்யா ஆகியோர் மேஜர் ஆன பின்னர் வழக்கறிஞர் ஜெயசங்கர் மூலம் இழப்பீடு தொகை கோரி மனு செய்ததால், தவறுதலாக 826/03 வழக்கிற்கு பதிலாக 1826/03 ல் உள்ள அதிக தொகையான வட்டியுடன் 5 லட்சத்து 40 ஆயிரத்து 540 ரூபாயை நீதிமன்றத்தை ஏமாற்றி பெற்றுள்ளார்கள். நீதிமன்றத்தில் உதவி சிராஸ்தாரராக பணிபுரிந்து வந்த குணாளன் இதனை தெரிந்து கொண்டு 826/03 வழக்கில் நீதிமன்றத்தில் இருந்த வைப்பீடு ரசீதை திருடிச் சென்று நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி வழங்கியது போன்ற ஒரு போலியான கடிதம் தயார் செய்து கடலூர் வண்ணாரபாளையத்தை சேர்ந்த சிவதாஸ் உதவியோடு, கனரா வங்கியில் கொடுத்து கடலூர் வண்டிபாளையத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் பெயருக்கு ரூபாய்.2 லட்சத்து 42 ஆயிரத்திற்கு வரைவோலை பெற்று, அதனை கடலூர் யூகோ வங்கியில் சத்தியமூர்த்தி பெயரில் கணக்கு துவங்கி காசாக்கம் செய்து பணத்தை எடுத்து மூவரும் நீதிமன்றத்தை ஏமாற்றி பயன் அடைந்துள்ளார்கள். அதேபோல் 826/03 வழக்கில் மேலும் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு நீதிமன்றத்தை ஏமாற்றி அந்த பணத்தையும் பெற வேண்டும் என்று வழக்கறிஞர் ஜெயசங்கர் மீண்டும் லாவண்யா மற்றும் சரண்யா மூலம் இழப்பீடு தொகை கேட்டு மனு செய்துள்ளார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த புகாரின் பேரில் கடலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவுப்படி கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து  துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், காவல் ஆய்வாளர் துர்கா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவு குற்றவாளிகள் சத்தியமூர்த்தி, சிவதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் (31.05.2023)  நீதிமன்ற நடுவர் ரகோத்தமன் முன் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த குணாளன் என்பவர் சுமார் ஒரு மாத காலமாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். விரைவில் அவரும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்படுவார் என கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.