
திருச்செந்தூர் அருகே குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த 38 வயதான பெரியசாமி அப்பகுதியில் வெல்டிங் பட்டறையும், ஒர்க் ஷாப்பும் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பார்வதி(33). இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ஸ்ரீதேவ் என்ற மகனும், 3 வயதில் ஆதிரா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். ஸ்ரீ தேவ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கோடைகால விடுமுறையையொட்டி சிறுவன் ஸ்ரீதேவ் முக்காணியில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டில் தங்கியுள்ளான்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) காலையில் வழக்கம் போல பெரியசாமி வெல்டிங் பட்டறைக்கு பணிக்குச் சென்று விட்டார். பார்வதியும், குழந்தை ஆதிராவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். மாலை நேரத்தில் பெரியசாமியின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தை ஆதிரா மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பார்வதி கதறி அழுது கொண்டிருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தை ஆதிராவை திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஆதிராவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் உள்ளிட்ட போலீசார் குழந்தை ஆதிரா உயிரிழந்தது குறித்து தாய் பார்வதியை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், மாலையில் நானும் எனது குழந்தை ஆதிராவும் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது, எனது குழந்தையின் அழுகுரல் கேட்டு கண் விழித்து பார்த்தபோது, வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் குழந்தை ஆதிராவின் கழுத்தை நெரித்தவாறு என்னிடம் தாலி சங்கிலியை கழட்டி தருமாறு கேட்டார். உடனே அதிர்ச்சியடைந்து நான், எனது சங்கிலியை கழட்டிக் கொடுத்தேன். அப்போது குழந்தையை கீழே இறக்கிவிட்டார். அப்போது ஆதிராவிற்கு மூச்சு பேச்சு இல்லாமல் சுருண்டு விழுந்ததை கண்ட அந்த மர்ம நபர் தாலி சங்கிலியை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான தடையங்களை கைப்பற்றிய போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே குழந்தை ஆதிராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப் பதிவு செய்து 4 தனிப்படைகளை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் அதிரடி திருப்பமாக குழந்தை ஆதிராவின் தாய் பார்வதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்றிரவு அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விடிய விடியத் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் கூறுகையில் இது நகைக்காக நடந்த கொலை என கூறுவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. பார்வதி அளித்த வாக்குமூலத்தின் படி வீட்டுக்குள் ஊடுருவிய மர்ம நபர் குறித்தும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. பார்வதி கடந்த ஓராண்டாக லேசாக மனநலம் பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் தனியார் மனநல மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு உண்மையை உறுதி செய்வதற்காக தனிப்படை காத்திருக்கிறது என்றனர்.
நகைக்காக தனது பெண் குழந்தை மர்ம நபரால் கொடூரமாக கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதாக தாய் வாக்குமூலம் அளித்திருந்த சம்பவத்தில் குழந்தையின் தாயே தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை வலையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி