Skip to main content

பயிர் காப்பீடு செய்ய மறுக்கும் கூட்டுறவு சங்கங்கள் இ-சேவை மையங்கள்; கால நீடிப்பு செய்ய சி.பி.எம். கோரிக்கை...

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
Crop

 

 

பிரதம மந்திரியின் திருந்திய பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய கூட்டுறவு சங்கங்களும், அரசு இ-சேவை மையங்களும் மறுப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் விடுத்துள்ள அறிக்கையில், “2020-21ஆம் ஆண்டு கார் பருவத்திற்கு நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, துவரை, சோளம், கம்பு, எள், வெண்டை ஆகிய ஒன்பது பயிர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அறிவிக்கை செய்தும், அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற பயிர் காப்பீட்டு நிறுவனத்தை ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

 

நெல் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, துவரை, எள், வெண்டை ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய இறுதிநாள் 31.07.2020 எனவும், சோளம், கம்பு ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய இறுதி நாள் 15.08.2020 என மாவட்ட ஆட்சியர் கடந்த 21-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேற்படி காப்பீடு நிறுவனமும் நாளிதழ்களில் விளம்பரம்  வெளியிட்டு இருந்தது.

 

பயிர்க் கடன்பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளில் பயிர் காப்பீட்டுதிட்டத்தில் பதிவுசெய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் காப்பீட்டுநிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கங்கள் மற்றும் வணிகவங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம். எக்காரணத்தை முன்னிட்டும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குபின் பயிர் காப்பீடு செய்பவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், விவசாயிகள் சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களை அணுகினால் இங்கே காப்பீட செய்ய முடியாது. பொது இ-சேவை மையத்திற்கு செல்லுமாறு தெரிவிக்கின்றனர். பொது இ-சேவை மையத்திலோ சம்மந்தப்பட்ட வேளாண்மை  கூட்டுறவு சங்கங்களுக்கு செல்லுமாறு விரட்டியடிக்கப்படுகின்றனர். தனியார் இ-சேவை மையங்களிலும் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. ஓரிரு மையங்களில் பதிவு செய்ய முன்வந்தாலும் காப்பீட்டுத் தொகையைவிட கூடுதலாக சேவை கட்டணமாக பல மடங்கு பணம் கேட்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களிலும், பொது இ-சேவை மையங்களிலும் பயிர்காப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும்.

 

காப்பீடு செய்வதற்கான தேதி ஜூலை 31-க்குள் முடிவடைவதால் கால அவகாசம் போதாது. எனவே, காப்பீடு செய்வதற்கான கால அளவையும் நீட்டித்து உத்தரவு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகளையும், விவசாய அமைப்புகளையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
The Governor has been imposed on TN Minister Palanivel Thiagarajan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும். அதனால்தான் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர். பேரிடரின்போது உதவி கேட்டால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பது போல் பா.ஜ.க.வைப் பற்றி மக்கள் எண்ணுகின்றனர். கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.