கரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸின் தாக்கத்தைத் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடியுங்கள் என்று பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலதரப்பினரும் மக்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, "தேவையின்றி வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டாம். மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம். கரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தாலும் வரும்காலம் கடினமாகவே இருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.