Skip to main content

“அப்பா, அம்மா கஷ்டப்படுறாங்க... மத்தவங்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது” - கடிதம் எழுதிய மாணவி தற்கொலை 

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

College student passed away in nellai

 

நெல்லை மாவட்டத்தின் களக்காடு பக்கமுள்ள சிதம்பரபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துக்குமார் (55) இவருக்கு மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது 18 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்துமுடித்துவிட்டு, நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்.சி.(ஐ.டி) படிப்பிற்காக விண்ணப்பித்தவருக்கு இடம் கிடைத்தது. செமஸ்டர் பணம் ரூ. 12 ஆயிரம் கட்டமுடியாமல் தவித்த தந்தை முத்துக்குமார் இரண்டு தவணையாகக் கட்டியிருக்கிறார். ஆனாலும் கூலித் தொழிலாளி வருமானத்தில் குடும்பத்தை நடத்த போதிய பணமில்லாமல் திண்டாடியிருக்கிறார். ஆனாலும் மகள் படிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சிரமப்பட்டு பணம் கட்டியதாகத் தெரிகிறது.

 

இதையெல்லாம் அருகிலிருந்தபடியே கவனித்த அவரது மகள், பெற்றோர் படுகிற சிரமங்களை எண்ணி வேதனைப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்துக்குமார் தன் மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அது சமயம் வீட்டில் தனியே இருந்த அவரது மகள் மன வேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 


வீடு திரும்பிய முத்துக்குமாரும் மனைவியும் வீடு உட்புறம் பூட்டியிருந்ததால் நீண்ட நேரமாக தட்டியுள்ளனர். பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மகள் தூக்கில் சடலமாகத் தொங்கியது கண்டு கதறியிருக்கிறார்கள். தகவலறிந்து சம்பவ இடம் வந்த களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவியின் கைப்பையைச் சோதனையிட்டதில் அதில் அவர் தற்கொலைக்கு முன்பாக எழுதிய கண்ணீர் கடிதம் சிக்கியிருக்கிறது.

 


கடிதத்தில், ‘எனக்குக் காலேஜ் பீஸ் கட்ட அப்பா, அம்மா கஷ்டப்படுறாங்க. மற்றவங்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று தான் இந்த முடிவு. என் சாவில் மர்மம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த லெட்டர். எனது தற்கொலைக்கு வேறு எதுவும் காரணமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

 

மாணவியின் இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.