Skip to main content

கிணற்றில் கல்லூரி மாணவி சடலம்... யார் அந்த 4 வாலிபர்கள்? காவல்துறை விசாரணை!!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

College girl passes away near salem police investigation

 

சேலம் அருகே, கிணற்றிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரை கொலை செய்து வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நான்கு பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

சேலத்தை அடுத்த காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்தது. சுடிதார் அணிந்திருந்த அந்தப் பெண்ணின் சடலத்தில் பெரும்பாலான சதை பகுதிகள் தண்ணீரில் ஊறியதால் சிதிலமடைந்து, எலும்புக் கூடாக இருந்தது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கண்மணி, வனிதா தம்பதியின் மகள் தித்திமிலா (19) கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதிமுதல் காணவில்லை என தந்தை கண்மணி புகார் அளித்திருந்தார்.

 

அதனால் சந்தேகத்தின்பேரில் அவரை அழைத்து வந்து, கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தைக் காட்டினர். சடலமாக மீட்கப்பட்டது தனது மகள்தான் என்று கண்மணி அடையாளம் காட்டினார். எலும்புக்கூடாக காட்சி அளித்த மகளின் சடலத்தைப் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். 

 

தித்திமிலா, சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி, பாட்டி வீட்டிற்குச் சென்றுவருவதாக வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் அவர் பாட்டி வீட்டுக்கும் செல்லவில்லை; அவரது வீட்டுக்கும் திரும்பவில்லை. இந்நிலையில்தான் அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். 

 

தலை இல்லாமல் வெறும் உடலாக சடலம் மீட்கப்பட்டுள்ளதால் யாராவது அவரது தலையை வெட்டிக் கொலை செய்து, சடலத்தைக் கிணற்றில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சடலம் கைப்பற்றப்பட்ட விவசாயக் கிணறு பெரும்பாலும் வறண்டுதான் இருக்கும். 

 

சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்துள்ளதால் கிணற்றில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால்தான் சடலமும் மிதந்துள்ளது. ஒருவேளை, தண்ணீரில் இரண்டு மாத காலமாக சடலம் ஊறிப்போனதால், தலை பகுதி அழுகிப்போய் தானாகவே துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். 

 

இந்த சந்தேகத்தின் அடிப்படையில், அந்தக் கிணற்றில் இளம்பெண்ணின் தலை பகுதி கிடைக்குமா என்றும் காவல்துறையினர் தேடிவருகின்றனர். சடலம், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க, தித்திமிலாவின் பெற்றோரும், உறவினர்களும் வியாழக்கிழமை (அக். 21) காலை திடீரென்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

 

தித்திமிலாவின் தந்தை கண்மணி கூறுகையில், ''மகள் காணாமல் போனது குறித்து அப்போதே காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் வேகமாக செயல்பட்டிருந்தால் ஒருவேளை, என் மகளை உயிருடன் மீட்டிருக்கலாம்.
 

அதன்பிறகு சேலம் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரிடமும் புகார் அளித்தேன். என் புகார் மனு மீது எஸ்.பி. விசாரணை நடத்தியும் மகள் கிடைக்கவில்லை. என் மகள் கடைசியாக உள்ளூரைச் சேர்ந்த ஒரு பையனிடம் செல்ஃபோனில் பேசியுள்ளார். மகளுடைய சாவில் எங்கள் ஊரைச் சேர்ந்த 4 பேர் மீது சந்தேகம் இருக்கிறது. அவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கண்ணீருடன் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.