Skip to main content

"நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை" -  கோயில் வழக்கறிஞர் 

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

chidambaram natarajar temple hindu religious endowment charitable issue

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு நகைகளை ஆய்வு செய்ய அனுமதி இல்லை. அதனால் வெளி தணிக்கையாளர்கள் மூலம் கணக்கு மற்றும் நகைகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது என கோயில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்து சமய அறநிலையத்துறையினர் உள் நோக்கத்துடன் கோயில் நிர்வாகத்தை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். நடராஜர் கோயில் கணக்கு கேட்டு இரண்டுக்கும் மேற்பட்ட இந்து அறநிலையத்துறையினர் கடிதம் அனுப்பினர். பின்னர் ஆய்வுக்குழு வந்தது. அப்போது நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், தனி சமயப் பிரிவினரான பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வரும் இக்கோயிலில் அறநிலையத்துறையின்  சட்டத்தின் கீழ் கணக்கு கேட்கவோ, ஆய்வையோ நடத்த முடியாது என வெளிப்படையாக பதில் தெரிவித்தோம்.

 

அதன் பின்னரும்  2005 முதல் 2022 வரை உள்ள நகை சரிபார்ப்பு செய்ய வேண்டும் என கோரினர். அதன் பின்னர்  1955 முதல் 2005 வரை நகை சரிபார்ப்பு, கணக்கு ஆய்வு செய்வதாக கோரிய போது நாங்கள் பட்டயம் பெற்ற வெளி தணிக்கையாளர்கள் மூலம் கணக்குகளும், நகைகளும் சரிபார்க்கப்பட்டு தணிக்கை செய்ய உள்ளோம் என பதில் தெரிவித்திருந்தோம். அதன்படி கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதியிலிருந்து கோயில் சட்ட ஆலோசகரான எனது மேற்பார்வையில் பட்டயம் பெற்ற இரு தணிக்கையாளர்கள் மூலம் கோயில் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து தயாராக வைத்துள்ளோம். நடராஜர் கோயில் தனி நிர்வாகம் என்பதால் வெளிப்படை தன்மையை நிரூபிக்கும் வகையில் வெளி தணிக்கையாளர்களை வைத்து தணிக்கையை தொடங்கி உள்ளோம்.

 

கோவில் நிர்வாகத்தில் தவறு உள்ளது நாங்கள் ஆய்வு செய்வோம் என்று அறநிலையத்துறை அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.  இறுதியாக நாங்கள் கேட்கிறோம் கோவிலில் நடைபெற்ற எந்த தவறுக்கு என்ன ஆதாரம் உள்ளது ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும்.  குற்றம் இருந்தால் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதால் அது உண்மையாகி விடாது' என்றார். கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் உடனிருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Release of special election report

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

படகு கவிழ்ந்து மீனவர் பலி; இருவர் மருத்துவமனையில் அனுமதி

Published on 31/12/2023 | Edited on 01/01/2024
Fisherman incident after boat capsizes Two were hospitalized

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயசீலன் (வயது 42), அமுது (வயது 48), சக்திவேல் (வயது 50) ஆகிய 3 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பரங்கிப்பேட்டை கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் அமுது, சக்திவேல் ஆகிய இருவரும் கடலில் நீந்தி காயங்களுடன் கரைக்கு வந்துள்ளனர். இதில் ஜெயசீலன் மாயமாகியுள்ளார். மேலும் கரைக்கு வந்தவர்களை மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் படகு கவிழ்ந்து காணாமல் போன ஜெயசீலன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் தேடும் பணியில் கடந்த 2  நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (31.102023) சின்ன வாய்க்கால் கடற்கரை ஓரமாக இவரது உடல் கரை ஒதுங்கி உள்ளது. இதனை மீட்டு பரங்கிப்பேட்டை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மீனவர் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, சிபிஎம் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் சந்தானராஜ், நிர்வாகி பழனி, சுந்தர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆகாஷ் உள்ளிட்டவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் குறித்து எஸ்.ஜி ரமேஷ்பாபு தெரிவிக்கையில், “உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கும், காயத்துடன் உயிர் தப்பியவர்களுக்கும், படகு சேதமடைந்ததற்கு நிவராணம் வழங்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.