Skip to main content

அண்ணாமலைக்கு வைத்த பேனரில் ஏற்பட்ட தகராறு;கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நிர்வாகிகளுக்கு தடை!    

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

BJP puthokataai issue

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வைரிவயலைச் சேர்ந்தவர் கவிதா ஸ்ரீகாந்த். பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி செயலாளராக இருந்த இவர் மாநில மகளிரணி பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து புதிய பொறுப்பு வழங்கிய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அறந்தாங்கி நகரில் 6 இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளார். இந்த பேனரில் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அறந்தாங்கி நகரத் தலைவர் படம் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அறந்தாங்கி நகர பாஜக தலைவர் ரமேஷ், தனது ஆதரவாளர்களுடன் மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதாஸ்ரீகாந்த் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றியுள்ளார்.


இந்தத் தகவல் அறிந்து வந்த பாஜக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதா, அவரது கணவர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பெட்ரோல் பங்க் அருகே வைத்திருந்த பிளக்ஸ் பேனரை ரமேஷ் அகற்றிக் கொண்டிருந்த போது அவரிடம் ஏன் பிளக்ஸ் பேனரை அகற்றுகிறீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு ரமேஷ் பேனரில் மாவட்டச் செயலாளர் மற்றும் நகரத் தலைவர் படம் இல்லாமல் இருந்தது. அதனால் தான் அகற்றுகிறோம் எனக் கூறியுள்ளார்.

 

நீ யாரு பேனரை அகற்ற என்று ஸ்ரீகாந்த் கேட்க, நான் நகரம்டா என்று ரமேஷ் சொல்ல நான் மாநிலம்டா என்று ஸ்ரீகாந்த் சொல்லிக் கொண்டே தான் வைத்திருந்த பைக் சாவியால் ரமேஷ் முகத்தில் குத்தினார். இதில் காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்நிலையத்தில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் அவரைத் தாக்கியதாக பாஜக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதா, அவரது கணவர் ஸ்ரீகாந்த், இளங்கோவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


இதைப்போல நகரத்தலைவர் ரமேஷ் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரின் பேரில் நகரத் தலைவர் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
பாஜகவினர் இடையே நடைபெற்ற இந்த மோதல் குறித்த வீடியோ, சமுக வலைதளத்தில் வைரலாகியது. அறந்தாங்கியில் பிளக்ஸ் பேனர் வைத்தது தொடர்பாக பாஜகவினரிடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் பாஜக புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் செல்வம் அழகப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பொதுவெளியில் நம் கட்சி நிர்வாகிகள் தாக்கிக் கொண்டது கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சி நிர்வாகிகள் பேனர்கள் வைத்தால் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன் ஒன்றிய தலைமை இடம்பெற வைக்க வேண்டும்.


 
இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற மாவட்டத் தலைவரை கவிதா ஸ்ரீ காந்த் தனது அடியாட்களைக் கொண்டு முற்றுகையிட்டு கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதற்காக இருவரும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம். மேலும் இருவரையும் முன்னிறுத்தும் வகையில் நமது கட்சியினர் பேனர்கள் வைக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.