
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கட்டெறும்பு என்கிற இசக்கி முத்து (40). பாஜகவைச் சேர்ந்த இவர், பேஸ்புக், எக்ஸ், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கட்டெறும்பு என்ற பெயரில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த காரணத்தினால் இவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இவரது எக்ஸ் தளத்தில் அண்மையில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது வெறுப்பையும், மத மோதல்களை தூண்டும் வகையில் ஒரு தரப்பினரை இழிவுபடுத்தி சில கருத்துக்களை பதிவிட்டிருந்துள்ளார். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் ஆதாரத்துடன் தூத்துக்குடி மாவட்டம் கொலுவைநல்லூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டீபன் தாஸ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தார்.
இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் விசாரணை நடத்தி பாஜக பிரமுகர் கட்டெறும்பு என்ற இசக்கி முத்து மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி