Skip to main content

"பாஜக தன் தனித்துவத்தை நிரூபித்துவிட்டது"- அண்ணாமலை பெருமிதம்!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

"Bharatiya Janata Party has proved its uniqueness" - Annamalai proud!

 

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (22/02/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக உள்ளாட்சித் தேர்தலில், 13 கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து, தவறாகப் பயன்படுத்தப்பட்ட அரசு எந்திரத்தை எதிர்த்து, தமிழக மக்களை மட்டும் நம்பி, தன்னம்பிக்கையுடன், தனியே போட்டியிட்டு, பாரதிய ஜனதா கட்சி, தன் தனித்துவத்தை நிரூபித்து விட்டது. 

 

தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்து நபருக்கும் திட்டங்களைக் கொண்டு சேர்த்த, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்து, தமிழக மக்கள் தந்த மனப்பூர்வமான அங்கீகாரம் இந்த மகத்தான வெற்றி. 

 

முதலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அமோக வெற்றிகளை தேடித்தந்த தமிழக மக்களின் பொற்பாதங்களை வணங்கி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சி பெற்ற வெற்றியை பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.

 

ஆளும் கட்சியின் அத்துமீறல், பணபலம், படைபலம், கள்ள ஓட்டு, என்ற எல்லா வகையான அராஜகத்தைத் தாண்டியும், மாநகராட்சிகளில் 22- க்கும் மேற்பட்ட இடங்கள்,  நகராட்சிகளில் 56- க்கும் மேற்பட்ட இடங்கள், பேரூராட்சிகளில் 230- க்கும் மேற்பட்ட இடங்கள் என்று பா.ஜ.க.வுக்கு கிடைத்த இடங்களும், இதுவரை இல்லாத மிக அதிகமான வாக்கு சதவீதமும், பா.ஜ.க.விற்கு மக்கள் தந்த அங்கீகாரம். பா.ஜ.க. தொண்டர்களை நம்பி, தமிழக மக்களை நம்பி,  தனியே போட்டியிடலாம் என்ற சிறந்த முடிவினை, பா.ஜ.க. தலைவர்கள் எடுத்த துணிச்சலான முடிவிற்கு, மக்கள் தந்த பரிசு இந்த வெற்றி.

 

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என்று, எள்ளி நகையாடிய எதிர்க்கட்சிகளின் கண்முன்னே திருப்பூர் குண்டடம் 9- வது வார்டில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு முன்வெறும் 30 ஓட்டுக்கள் வாங்கி தி.மு.க. டெபாசிட் இழந்ததுள்ளது.  அது மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பரவலாக பெருவாரியான வாக்குகளைப் பெற்று, சென்னை, நாகர்கோவில், தஞ்சாவூர், கடலூர், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், வேலூர், காஞ்சிபுரம், திருப்பூர், ஓசூர் என்று 11 மாநகராட்சிகளில் வெற்றிக் கணக்கை பா.ஜ.க. தொடங்கிவிட்டது. இது தவிர மற்ற பல இடங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பா.ஜ.க. பெற்றது. அதிலும் சிறப்பாக, இதுவரை வெற்றி பெறாத பல இடங்களில் பா.ஜ.க. தன் வெற்றியைப் பதிவு செய்தது. 

 

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, இதற்கு முன் கேள்விப்படாத அளவிற்கு, ஆளும் கட்சியால் பல கோடிகளை வாரி இறைத்து நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் இந்தத் தேர்தல். வாக்குக்குப் பணம், வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், என்று ஒரு வாக்குக்கு பல ஆயிரக்கணக்கில் செய்யப்பட்ட செலவுகள் பல கோடிகளைத் தாண்டும். 

 

ஜனநாயகத்தில் உள்ள அனைத்திற்கும் ஒரு விலை வைத்து, வாக்குகளுக்கும், வாக்காளர்களுக்கும் பணம் கொடுத்து, கள்ள ஓட்டுக்கள் போட்டு, வாக்குப் பெட்டிகளை கைப்பற்றி, ஆளும் கட்சி செய்த அத்தனை அராஜகத்தையும் மீறி பணநாயகத்தை தோற்கடித்து, தமிழகத்தில் தாமரை மலர்ந்து இருக்கிறது. 

 

பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சியில், தன் வெற்றி கணக்கை தொடங்கி விட்டது. பா.ஜ.க. தமிழகத்தில் எப்போதோ வேரூன்றி விட்டது. இப்போது முழுமையாக மலர்ந்து விட்டது. ஆளும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.இ.அ.தி.மு.க கூட்டணி இவர்களுக்கு அடுத்து மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ளது.

 

பாரதப் பிரதமரின் ஊழலற்ற உன்னதமான ஆட்சிக்கு தமிழகமக்கள் கொடுத்த அன்புப்பரிசாக, இந்த வெற்றியைப் பார்க்கிறோம். பா.ஜ.க.வை ஒரு தவிர்க்க முடியாத மாற்று சக்தியாக தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதை இந்த வெற்றி பறை சாற்றுகிறது. தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என்பதற்கு இந்த வெற்றி கட்டியம் கூறுகிறது. தமிழக மக்கள் ஆலம் எடுத்து பா.ஜ.க.வை வரவேற்று, தி.மு.க.விற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சம்மட்டி அடி கொடுத்துள்ளார்கள். 

 

பா.ஜ.க.வை அங்கீகரித்து, தமிழக மக்கள் தந்த இந்த வெற்றியை தலைவணங்கி நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறோம். வெற்றிக்காக அயராது பாடுபட்ட அனைத்து பாரதிய ஜனதாக் கட்சியின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், களத்தில் நின்ற வேட்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

2024-ஆம் ஆண்டு தேர்தல் களத்திற்கு பாஜக தயார்". இவ்வாறு பா.ஜ.க.வின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.