Skip to main content

"நீங்கள் எல்லாம் சமூக நீதி பற்றி பேசலாமா?" - மத்திய அரசை தமிழில் விளாசிய ஜோதிமணி எம்.பி!

Published on 11/08/2021 | Edited on 12/08/2021

 

Asathiya Jyotimani MP speaking in Tamil in the Lok Sabha!

 

நாடாளுமன்றத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க மாநிலங்களுக்கு உரிமை வழங்கும் 127- வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று (11/08/2021) நடைபெற்றது. 

 

இந்த விவாதத்தில் கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பங்கேற்றுப் பேசினார். அவர் மக்களவையில் கூறியதாவது, "அவை தலைவருக்கு வணக்கம். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மாநில அரசுகளின் உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பு திருத்த முன்வரைவை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சில வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன். பாஜகவையும், நரேந்திர மோடியையும் பிற்படுத்தப்பட்ட மக்களைக் காக்க வந்த ரட்சகர்களாக நீங்கள் பறைசாற்றுகிறீர்கள். மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டபோது, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் துடைப்பத்தோடு வீதியில் வேலை செய்ய வேண்டியவர்கள் எல்லாம் படித்து பட்டம் பெற்று அதிகாரத்தை அலங்கரித்து விடுவார்கள் என்று அவதூறு செய்தது யார்? துடைப்பத்தோடு வீதி வீதியாக ஊர்வலம் போனது யார்? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக வி.பி.சிங் அரசைக் கவிழ்த்தது யார்? நீங்கள் அல்லவா, நீங்கள் எல்லாம் சமூக நீதி பற்றி பேசலாமா? ஒன்றிய அரசின் அமைச்சர் அவர்கள் மசோதாவைத் தாக்கல் செய்யும் பொழுது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்வியில் உயர் கல்வி உள்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நரேந்திர மோடி அவர்களின் தயவில் ஓ.பி.சி. மாணவர்கள் பெற்றது போல ஒரு சித்திரத்தை முன் வைத்தார். 

 

அதன் பின் உள்ள உண்மையை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இத்துடன் தமிழகத்தில் பெருமை மிகு சமூக நீதி வரலாற்றையும் இந்த அரசுக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தியாவின் முதல் அரசியல் சாசனத் சட்டத் திருத்தம் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் தனது மகத்தான சாதனைகளுக்காக உங்களால் தினந்தோறும் வெறுக்கப்படும் நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு, முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அன்று துவங்கி தமிழகத்தின் தனித்துவமான 69% இட ஒதுக்கீடு கொள்கையை நாங்கள் காலம் காலமாக நிலை நிறுத்தி வருகிறோம் என்பதை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த பாரம்பரியத்தையொட்டி இன்று மருத்துவக் கல்வியில் 27% சதவீத ஒதுக்கீட்டை தமிழகமே போராடி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. சமீபத்திய வரலாறு. ஆனால், இதனை பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையாக வழக்கம் போல் பறைசாற்றி வருகிறீர்கள். 

 

பொய்களையும், பாஜகவையும் பிரிக்க முடியாது. உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் மருத்துவக் கல்லூரியில் ஓ.பி.சி.களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது நரேந்திர மோடியின் அரசு என்பது இந்த நாடு மறுக்காது. எத்தனை வருடங்களாக நீங்கள் இந்திரா காந்தி வழக்கைக் காரணம் காட்டி ஓ.பி.சி. மக்களுக்கு வரலாற்று ரீதியாக அநீதி இழைத்தீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்; இந்த நாடும் அறிவோம். தமிழகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூகநீதிக்கான அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக சென்னை உயர்நீதிமன்றம் மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அனைத்தும் மருத்துவச் சேர்க்கைக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்து வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பை வழங்கியது. 

 

அந்த தீர்ப்புக்கு பின்பாவது பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான, சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாட்டை நீங்கள் மாற்றிக் கொண்டீர்களா? இல்லை, அதற்கும் நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டியிருந்தது. சமூக நீதிக்கான தமிழகத்தின் சமரசமற்றப் போராட்டத்தின் விளைவாகவே மருத்துவக் கல்லூரியில் 27% இட ஒதுக்கீடு சாத்தியப்பட்டிருக்கிறது என்பதை இந்த அவையில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதிலும், தமிழகத்திற்கு 23% இட ஒதுக்கீடு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஏனென்றால், தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 69% இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடும், தலித்துகளுக்கு 18% இட ஒதுக்கீடும், மக்கள் தொகையில் குறைவாக உள்ள மலைவாழ் மக்களுக்கு 1% இட ஒதுக்கீடும் அமல்படுத்தப்படுகிறது. 

 

50% பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு காலம் காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இப்போதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தெளிவாகப் பதிலளிக்காமல் ஒன்றிய அரசு மழுப்பி வருகிறது என்பது தான் உண்மை. இதனைத் தொடர்ந்து 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை ஒன்றிய அரசு காரணம் காட்டி வருகிறது. ஒன்றிய அரசு 10% பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் மூலம் அதை மீறிய பிறகு, ஏன் மாநிலங்கள் 50%-க்கும் மேற்பட்ட இட ஒதுக்கீட்டை மாநிலங்கள் வழங்கக் கூடாது என்பதை மக்கள் மன்றத்தில் இந்த அரசு பதிவு செய்ய வேண்டும். 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்குவதற்காக, இதேபோல அரசியல் சாசனத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். அப்பொழுது தான் இந்த அரசாங்கம் நீலிக்கண்ணீர் வடிக்காமல் உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், இட ஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் ஆதரவாக இருக்கிறது என்ற பிம்பத்தையாவது உங்களால் ஏற்படுத்த முடியும். 

 

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு சமூக நீதிக்கான 69% இட ஒதுக்கீடே காரணம் என்பதை உறுதியோடும், பெருமையோடும் எங்களால் இங்கே சொல்ல முடியும். சமூக நீதிக்கான சமரசமற்ற போராட்டத்தில் தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. நீங்கள் உண்மையில் 4,000- க்கும் மேற்பட்ட இடங்களை மருத்துவ மாணவர்களுக்கு வழங்கவில்லை. இந்த ஏழு ஆண்டுகளாக பல்லாயிரம் கணக்கான இடங்களைப் பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களிடம் இருந்து பறித்திருக்கிறீர்கள்; அவர்களுக்கு அநீதி இழைத்தீர்கள் என்பது தான் உண்மை. 

 

அனிதா உட்பட 11 மாணவர்கள் தமிழகத்தில் மட்டும் இந்த நீட் என்ற கொடிய கொலை கருவியால் உயிரை இழந்திருக்கிறார்கள். அப்பொழுதும் இந்த அரசு இரக்கமற்றுதான் நடந்து கொண்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக அதே இரக்கமின்மையை இந்த அரசாங்கம் தமிழக மாணவர்கள் மீதும், இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீதும் காட்டி வருகிறது என்பதை நாங்கள் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம். அதுமட்டுமல்ல, இந்த கொடுமைக்காக தமிழகம் ஒருபோதும் நரேந்திர மோடி அரசையும், பாஜகவையும் மன்னிக்காது என்பதையும் தமிழகத்தின் சார்பாக இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இதுமட்டுமல்ல, ஐ.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு நிறுவனங்களில் எத்தனை இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் ஓ.பி.சி. கமிட்டியில் உள்ளேன். 

 

எத்தனை முறை கட்சிப் பேதமில்லாமல் அனைத்து உறுப்பினர்களும் எத்தனை முறை, எத்தனை அமைச்சகங்களை அழைத்து ஏன் இந்த இட ஒதுக்கீட்டை நிரப்பப்படாமல் இருக்கிறது என்று கேட்கிறோம். ஆனால் அது இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்திற்கு பிற்படுத்தப்பட்டவர்கள் மீது அலட்சியம் என்பது தான் உண்மை. ஒருபக்கம் தொடர்ந்து இட ஒதுக்கீடு என்று முதலைக்கண்ணீர் வடிக்கும் நரேந்திர மோடி அரசு தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாகவும், கார்ப்பரேட் மயமாகவும் மாற்றி வருகிறது. அந்த இடங்களை இட ஒதுக்கீடு இல்லாது என்று அநீதியை அமல்படுத்தி வருகிறது. எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு இந்த அரசாங்கத்திற்கு? வரலாற்று பிரிப்பையும், வெற்று பைகளையும் பரப்புவதைக் கைவிட்டு நாட்டுக்கு உண்மையாக இருக்க ஒரே ஒரு முயற்சியாவது செய்யுங்கள். இல்லாவிட்டால் சமூக நீதிக்கான சமரசமற்றப் போராட்டத்தில் நாங்கள் உங்களைப் பணிய வைப்போம் . இப்போதும் அதுதான் நடந்தது; இனிமேலும் அது தான் நடக்கும். நன்றி" என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.  விவாதத்தில் முழுக்க முழுக்க ஜோதிமணி எம்.பி. தமிழில் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதனிடையே, ஓ.பி.சி. பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதால் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். பின்பு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிடும். அதைத் தொடர்ந்து சட்டம் அமலுக்கு வரும். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.