அருப்புக்கோட்டை பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமாரி. கொத்தனார் வேலை பார்த்து வந்த தன் கணவர் முத்துமணியை யாரோ அடித்துக் கொலை செய்து அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள செல்வம் தோட்டத்துக் கிணற்றில் போட்டுவிட்டார்கள் என்று முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையம் கடந்த 31/01/2023 அன்று வழக்குப்பதிவு செய்தது.
முத்துமணிக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தி மர்மமான முறையில் கொலை செய்தவர்களை கடந்த ஒன்றரை மாதங்களாக போலீசார் தேடி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர்களான சரவணகுமார், முனீஸ்வரன், விக்ரம் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் விசாரித்தபோது, தங்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாலேயே ஆத்திரத்தில் முத்துமணியை மூவரும் சேர்ந்து தாக்கி கொலை செய்தோம் என வாக்குமூலம் தந்திருக்கின்றனர்.
ரவுடிகள் வீச்சரிவாள் கொண்டு கேக் வெட்டி போலீசாரிடம் மாட்டிய சம்பவங்கள் பல உண்டு. அருப்புக்கோட்டையிலோ, போலீசாரே கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர். எப்படி தெரியுமா? முத்துமணி கொலை வழக்கில் துப்புத்துலக்கி மூன்று இளைஞர்களைக் கைது செய்ததை மிகப்பெரிய சாதனையாகக் கருதிய அருப்புக்கோட்டை காவல்துறையினர், Cr 41/23 16/3/23 என அந்த வழக்கின் குற்ற எண்ணையும் தேதியையும் குறிப்பிட்டு கேக் வாங்கி வெட்டியுள்ளனர். கொண்டாடியவர்கள் யார் யாரென்றால், அருப்புக்கோட்டை ஏ.டி.எஸ்.பி. கருண்காரட் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ. ராமச்சந்திரன், நாகராஜபிரபு உள்ளிட்ட காவலர்கள்தான்.
நடந்தது கொலை. கைதானவர்கள் கொலையாளிகள். கைது நடவடிக்கை எடுத்து கடமையாற்றியது காவல்துறையினர். இதைக் கூட சாதனையாக கேக் வெட்டிக் கொண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளதை என்னவென்று சொல்வது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.