Skip to main content

தாலிகட்டும் முன் மாயமான மணமகன்; காதலித்து ஏமாற்றியதால் கைது

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Arrested youth who cheated girl

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன்(27). பி.இ பட்டதாரியான இவர், மும்பையில் உள்ள தனது 22 வயது உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

 

அந்தப் பெண் மும்பையில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் தமிழழகன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகிவந்துள்ளனர். அதன்பின் இரு வீட்டாருக்கும் இவர்களின் காதல் குறித்து தெரியவர இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். அதன் படி கடந்த 3ம் தேதி உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோயிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

 

இந்நிலையில், தாலி கட்டும் சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென்று மணமகன் தமிழழகன் கோயிலிருந்து மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், உளுந்தூர் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் மகளிர் போலீசார் தமிழழகன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழழகன், சென்னையில் தங்கி கல்லூரியில் படித்து வந்த போது அவருடன் படித்த சக மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை கடந்த 30ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழழகனை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்