
உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டி, சர்வதேச போட்டி என்று மற்ற நாடுகளுடன் இந்திய கிரிக்கெட் அணி மோதும் போது அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா என்ற ஒற்றை புள்ளியில் இணைந்து இந்திய அணிக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால், இந்தியாவில் விளையாடப்படும் ஐபிஎல் போட்டியில், தனக்கு பிடித்த வீரர்கள் எந்த அணியில் இருக்கிறார்களோ அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து தனித்தனியாககொண்டாடுவார்கள். மாநிலங்களை முன்னிலைப்படுத்தி அணிகளை பிரித்து விளையாடப்படும் இந்த ஐபிஎல் போட்டிக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட இந்த ஐபிஎல் போட்டி, 17 சீசன்களோடு கடந்த 17 வருடமாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் 18வது சீசன் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த சீசனின் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடி வந்த பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி பஞ்சாப் அணியோடு மோதியது. இதில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. கடந்த 17 சீசன்களிலும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணி, இந்தாண்டு முதல் முறையாக கோப்பையை வென்றது. பிசிசிஐ-யால் நடத்தப்பட்ட ஐபிஎல் 18வது சீசனில், 13 மைதானங்களில் 74 போட்டிகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் 2025 போட்டி தொடரின் மூலம் பிசிசிஐ 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. பிசிசிஐயின் பெரும்பான்மையான வருமானம் ஒளிபரப்பு கட்டணத்தில் தான் உள்ளது. அதன்படி, நடப்பு ஐபிஎல் தொடருக்கு ஒளிபரப்பு கட்டணமாக 9,678 கோடி ரூபாயை வயாகாம் 18 நிறுவனத்தின் மூலமாக பிசிசிஐ பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மூலம் இந்த தொடரில் பிசிசிஐ ரூ.500 கோடியை பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்சிப் ரூ. 2500 கோடி, டாடா நிறுவனம் பிசிசிஐக்கு 5 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. மை 11 சர்க்கள், ஏஞ்சல் ஒன், ரூ ரூபே, ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் பார்ட்னர், சீயட் டயர்ஸ், அஃபிஷியல் அம்பையர் பார்ட்னர், வொண்டர் சிமெண்ட், ஆரஞ்சு பர்பிள் கேப் பார்ட்னர், ஆராம்கோ உள்ளிட்ட முக்கிய ஸ்பான்சர்ஷிப் மூலமாகவும் பிசிசிஐக்கு வருமானம் கிடைக்கிறது. 2023 ஆம் ஆண்டு பிசிசிஐக்கு சுமார் ரூ. 16,493 கோடி கிடைத்ததாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் பிசிசிஐ 20 ஆயிரத்து 686 கோடி ரூபாய் வரை பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.