
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து 102 ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அங்குள்ள மறைவான பகுதியில் அமர்ந்து புகை பிடிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அதனான் என்பவர் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டது தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் அதுனானை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதனான் இந்த வீடியோவை 102 ரெட்டியூர் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் தான் வெளியிடச் சொன்னார் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சம்பவத்தன்று இப்ராஹிம் வெளிநாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் அசாருதீன் மற்றும் திருப்பதி ஆகியோரின் வற்புறுத்தல் காரணமாகவே வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இப்ராஹிம் மற்றும் காவலர் அசாருதீன் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகவும், அதற்காக அவரை பழிவாங்க சிறுவனின் வீடியோவை காவலர்கள் அசாருதீன், திருப்பதி இருவரும் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுவன் புகைப்பிடத்ததை சமூக வலைதளத்தில் வெளியிட காரணமாக இருந்த ஆயுதப்படை காவலர்கள் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவிட்டுள்ளார்.