Skip to main content

எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர் திடீர் மாயம்!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

AIIMS hospital nurse missing

 

சேலம் சிவதாபுரம் பெருமாள்கோயில் கரடு பகுதியைச் சேர்ந்தவர் அழகு (53). இவருடைய மகள் மோனிஷா (25). இவர், ஹைதராபாத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இவர், கடந்த வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு பெற்றோரைக் காண்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். விடுப்பு முடிந்து அவர் மீண்டும் ஹைதராபாத் செல்வதற்காக, மே 27 ஆம் தேதி காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பினார். 

 

அவருடைய தம்பி, மோனிஷாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார். ஹைதராபாத் சென்றதும் அலைப்பேசி மூலம் தகவல் அளிப்பார் என எதிர்பார்த்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவருடைய அலைப்பேசிக்கு அழைத்தபோது, அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து அழகு, சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் தனது மகள் மோனிஷாவை காணவில்லை எனப் புகார் அளித்தார்.

 

ஆய்வாளர் ராணி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் எந்த இடத்தில் இறக்கிவிடப்பட்டார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். மோனிஷாவை யாராவது கடத்திச் சென்றார்களா? காதல் விவகாரத்தில் தலைமறைவாகிவிட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.