Skip to main content

யானையைக் கொடுமை செய்த அ.தி.மு.க. பிரமுகர்! 

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
ADMK Member covai midhun fined 1 lakh

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளாகும். இதனால், அப்பகுதிகளில் சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, காட்டுமாடு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்கின்றன. பொதுவாக வனவிலங்குகள் இரவு நேரங்களில் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், வனத்தினுள்ளும் சுற்றித் திரியும். இதன் காரணமாக வனப்பகுதி ஒட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை மூலம் எப்போதும் கவனமுடனும், வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறும் வாகனங்களை இயக்க எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். 

குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு பகுதி ஆறுகள் நிறைந்த பகுதி என்பதால் எப்போதுமே அங்கு செழுமையாகக் காணப்படும். மேலும், அந்தப் பகுதி பல்வேறு அரியவகை மரங்களும், மருத்துவக் குணம் கொண்ட அரியவகை செடிகளும் கொண்டுள்ள பகுதியாகும். ஆழியாற்றை சுற்றியுள்ள பல சிறிய நீரோடைகளும், இறுதியாக ஆழியாற்றை வந்து அடைகின்றன. இதனால் ஆழியாற்றில் இருந்து மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க ஆழியாறு, நவமலை எனும் பகுதியில் இருந்து ஆரம்பமாகிறது. இந்த நவமலை கோட்டூர் - மலையாண்டிப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. 

ADMK Member covai midhun fined 1 lakh

அடர் வனப்பகுதி என்பதால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல, காலை 6 மணி முதல் மாலை 6 வரை அனுமதித்து வனத்துறை கட்டுப்பாடு வித்தித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  மேலும், அந்தப் பகுதியில் வாழும் பழங்குடி இன மக்களைத் தவிர்த்து வெளி ஆட்கள் செல்ல எக்காரணம் கொண்டு அனுமதி கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், கோட்டூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மிதுன் என்பவர் தனது காரில் நவமலை வனப்பகுதி சாலையில் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்திற்கு முன்னால் ஒரு காட்டு யானை வந்துள்ளது. இவர் யானைக்கு வழிவிட்டு அமைதியாக நிற்காமல், தனது வாகனத்தில் இருந்த அதீத ஒளி கொண்ட முகப்பு விளக்கை ஒளிரவிட்டு யானையின் கண்களை கூசச் செய்து அங்கிருந்து விரட்டியுள்ளார். இப்படியாக சில தூரம் வரை அந்தக் காட்டு யானையை விரட்டியபடி சென்றுள்ளார் அ.தி.மு.க. பிரமுகர் மிதுன். பிறகு யானை பதட்டத்தில் பயந்தபடி காட்டுக்குள் சென்றபிறகு இவரும் அந்தச் சாலையில் தொடர்ந்து பயணித்துள்ளார். இந்தக் காட்சிகள் அவரது வாகனத்தின் உள்ளிருந்தே வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ADMK Member covai midhun fined 1 lakh

வீடியோ வெளியாகி யானை கொடுமை செய்யப்பட்டிருப்பது வெளியே தெரியவந்தபிறகு மிதுனுக்கு சமூகவலைத்தளங்களிலும், வன உயிர் ஆர்வலர்களும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்துவந்தனர். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறை அ.தி.மு.க. பிரமுகர் மிதுனுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் வித்தித்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.