நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இணைந்த பிறகு தற்போது 'பொங்கல் விழா' என்ற பெயரில் தேர்தல் முன் பரப்புரையைத் தொடங்கியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை திலகர் திடலில் பா.ஜ.க.வின் பொங்கல் விழா சனிக்கிழமை (09/01/2021) நடந்தது. இந்த விழாவில் குஷ்பு பங்கேற்கிறார் என்ற தகவல் பரவியதும் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் குவிந்திருந்தனர்.
இந்த நிலையில் குஷ்பு வரும் முன்பே பொங்கல் வைக்கப்பட்டிருந்தது. விழா மேடையில் ஏராளமான பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தது. குஷ்பு வந்ததும் கீழே நின்ற கட்சிக்காரர்களும் மேடை ஏற முயன்றனர். அந்தக் கூட்டத்திலிருந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்க பெண் போலீசார் வளையம் அமைத்தனர். அப்படியும் பலர் போலீசாரை தள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது குஷ்புவோடு புரட்சிக்கவிதாசன் மற்றும் மாவட்டத் தலைவர் ஆகியோரையும் அமர வைக்க முயன்றனர். ஆனால் பாதுகாப்பு கருதிச் சேர்களை அகற்றும்படி போலீசார் சொன்னார்கள். அதனால் குஷ்பு நின்ற மேடையிலிருந்து எடுக்கப்பட்ட சேர்கள் அவரது தலைக்கு மேலேயே நீண்ட நேரம் சுற்றியது. ஒரு கட்டத்தில் அவரது தலையில் இடித்துவிடுமோ என்ற நிலையில் இருந்தது.
விழாவில் பேசிய குஷ்பு, "உங்களை சந்தப்பது மகிழ்ச்சியாக இருக்கு. பொங்கல் முடிஞ்சதும் நமக்கு நிறைய வேலை இருக்கு. இப்போது ஒவ்வொரு தெருவிலும் பா.ஜ.க. கொடிப் பறக்கிறது. இதுக்கு காரணம் பிரதமர் மோடி தான். பா.ஜ.க.வை பார்க்க முடியாதுனு சொன்னவங்க இன்று பயப்படுறாங்க. தமிழகத்துல யாருமே பார்க்க முடியாத வெற்றி பா.ஜ.க.வுக்கு கிடைக்கப் போகுது. இந்த வெற்றி பா.ஜ.க. வெற்றி இல்லை; உங்கள் வெற்றி. பிரதமர் மோடியை நம்பி ஓட்டுப் போடப் போறீங்க. ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்தது பா.ஜ.க. தான். நீங்க அனைவரும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, "முதல்வர் பழனிசாமியை நாங்க ஏற்கவில்லை என்று சொல்லவில்லை. எங்கள் தலைமை அறிவிக்கும். எனது அரசியல் ஆசான் கலைஞர்; தி.மு.க. என்று சொல்லவில்லை. கலைஞர் இருந்தபோது இருந்த தி.மு.க. இப்போது இல்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்காரங்க யாரா இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.