Skip to main content

பயங்கர விபத்து! கல்லூரி மாணவி பலி! 

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

accident near cudaalore two women passes away

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஓலையூர் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பொன்னேரி - சித்தலூர் பைபாஸ் இடையே பேருந்து சென்று கொண்டிருந்தபோது விருத்தாசலம் டிரைவர் குடியிருப்பைச் சேர்ந்த ஹரி என்ற வாலிபரும், அவருடன் லிப்ட் கேட்டு சென்ற ஒரு இளம் பெண் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாவடிக்குப்பத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரது மனைவி சிந்தாமணி(65) மற்றும் சுமதி ஆகியோர் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று திரும்ப வீட்டிற்கு செல்வதற்காக  சாலையை கடந்தனர். 

 

அப்போது ஹரியின் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லிவிட்டு சிந்தாமணி ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார். ஹரி தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த அரசு பேருந்து திடீரென ஹரி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சாலையை கடந்து கொண்டிருந்த ஆடுகள் மீதும், சிந்தாமணி, சுமதி மீதும் மோதியது. இதில் சிந்தாமணி பேருந்தின் சக்கரங்கள் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மேலும் ஹரி உடன் லிப்ட் கேட்டு வந்த அந்த இளம் பெண்ணும் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஹரி, சுமதி காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் சாலையை கடந்து கொண்டிருந்த 3 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன. ஒரு ஆடு காயமடைந்தது. 

 

இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அப்போது அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும், பேருந்து வழக்கமாக வரும் பாதையில் வராமல் தற்போது கடைவீதி பகுதியில் சாலை பணி நடைபெறுவதால் சாலை மார்க்கத்தை திருப்பி விட்டுள்ளனர். அதனால் இந்த விபத்து நேரிட்டது. எனவே மீண்டும் பழைய சாலையில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடத்தில் சமாதானம் பேசினர். தொடர்ந்து 2 பெண்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடையாளம் தெரியாத அந்த இளம் பெண் யார் என விசாரணை நடத்தியபோது, விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் மகள் கவிதா(20) என்பதும், இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விபத்தில் ஒரே சமயத்தில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆடுகள் இறந்த இச்சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.