
சென்னை கோயம்பேட்டில் உள்ள பழ மார்க்கெட்டில் உணவுத்துறை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் 6 டன் ரசாயனம் தடவிய மாம்பழங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள 7 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் மாம்பழங்கள் ரசாயனங்களைத் தடவிப் பழுக்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஏழு கடைகளில் இருந்து சுமார் 6 டன் மாம்பழங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை ஒன்றிற்கு 5,000 ரூபாய் என மொத்தம் 35,000 ரூபாய் அபராதம் விதித்தனர். நேரடியாகப் பழங்கள் மீது ரசாயனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசு விதி இருக்கிறது.
மேலும் உணவுப்பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டின் அடிப்படையில் ரசாயனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் இருக்கும் நிலையில், அவற்றை மீறி நேரடியாகப் பழங்கள் மீது ரசாயனம் பயன்படுத்தப்படுவது தவறு. இதன் அடிப்படையில் அதிகாரிகள் ரசாயனம் தெளிக்கப்பட்ட பழங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால் கடைகளுக்குச் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துச் சென்றனர். ஒரேநாளில் மிக குறைவான எண்ணிக்கையிலான கடைகளில் இருந்து டன் கணக்கில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.