Skip to main content

பட்டா மாற்ற 40 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக விஏஓ கைது

Published on 12/01/2024 | Edited on 12/01/2024

   

40 thousand bribe to change belt; VAO arrested red-handed

 
கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே உள்ளது கீழ் அழிஞ்சி பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனு. இவர் தன் பெயருக்கு கிரையம் பெற்ற இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை உட்பிரிவு செய்து தன்  பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு வட்டாட்சியருக்கு இணைய வழியில் முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.

சீனு தனது நிலம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அவர்களை சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர் நீங்கள் இணைய வழியில் மனு செய்துவிட்டால் உடனே நாங்கள் பட்டா மாற்றி கொடுத்து விடுவோமா? அது எப்படி நடக்கும் நீங்கள் கொடுக்க வேண்டியதை எங்களுக்கு கொடுத்தால் தானே பட்ட மாற்றம் செய்ய முடியும் என்று பேரம் பேசி உள்ளார். பேரத்தின் முடிவில் பட்டா மாற்றம் செய்ய 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அவரிடம் பணம் ஏற்பாடு செய்துவிட்டு வருவதாக கூறிவிட்டு புறப்பட்ட சீனு 'நமக்கு சொந்தமான நிலத்தை நம் பெயருக்கு பட்டா மாற்றிக் கொடுக்க 40 ஆயிரம் லஞ்சமா... இது என்ன கொடுமை' என்று வேதனையின் உச்சத்திற்கு சென்றார்.

இதற்கு ஒரு முடிவுகட்ட முடிவு செய்தார். அந்த முடிவு அவர் நேரடியாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் அலுவலகத்தில் போய் நின்றார். கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் பட்டா மாற்றம் செய்ய 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழிகாட்டுதல்படி நேற்று மதியம் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனை விவசாயி சீனு சந்தித்தார். அப்போது ரசாயன பவுடர் தடவிய 40 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சீனு பிரபாகரனிடம் கொடுத்தார்.

பணத்தைப் பார்த்ததும் முகமலர்ச்சியுடன் வாங்கிய பிரபாகரன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிரபாகரனை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரை அங்கிருந்து நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று இந்த லஞ்சப்பணம் இன்னும் யார் யாருக்கு கொடுக்க தயாராக இருந்தீர்கள் என்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஏ டி எஸ் பி தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனைத்து துறைகளிலும் லஞ்சம் பெறுபவர்களை தொடர்ந்து கையும் களவுமாக கைது செய்து வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.