திருச்சி மாவட்டம், லால்குடி மாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்சுந்தரி(42). இவர், நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான விராகலூருக்கு சென்றுள்ளார். அங்கு இருந்து மாலை 6 மணிக்கு மாந்துறையில் உள்ள வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக லால்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு லால்குடி போலீஸார் விரைந்துவந்தனர். அங்கு அவர்கள் வீட்டினுள் சென்று சோதனை செய்து தடையங்களை சேகரித்தனர். அதன்பிறகு தமிழ்சுந்தரியிடம் விசாரணை நடத்தினர். அதில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 28 சவரன் நகை, ரூ.1.40 பணம் ஆகியவை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.