Skip to main content

கடலூரில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 2 டன் மீன்கள் பறிமுதல்!

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

2 tonnes of fish caught using narrow mesh nets seized in Cuddalore!

 

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்கள் பிடிப்பதால் சின்னஞ்சிறு மீன் குஞ்சுகள் முதல் பெரிய அளவிலான மீன்கள் வரை பிடிபடுகின்றன. இதனால் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதையடுத்து தமிழகம் முழுவதும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

அதையடுத்து அரசு சார்பில் அதிகாரிகள் மீனவர்கள் இடத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதை பிடிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும் ஒரு சில மீனவர்கள் இந்த சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தினமும் கடலில் ரோந்து பணி மேற்கொண்டு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும், அந்த படங்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்திய தேவனாம்பட்டினம், ராசாப்பேட்டை, அக்கரைகோரி மற்றும் சில மீனவ கிராமங்களைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு அரசால் வழங்கப்படும் மீன்பிடி தடை மற்றும் குறைவு கால நிவாரணம், மீனவர் சேமிப்பு நிவாரணம், மீனவர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரணம் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு நலத் திட்டங்களையும் நிரந்தரமாக ரத்து செய்து கடலூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டார். மேலும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க துணைபுரிந்த ஆறு நாட்டு படகுகளின் பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் படகுகளை கண்காணிக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளின் தலைமையில், ஆய்வாளர்கள், மீன்வள மேற்பார்வையாளர்கள், கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு காவலர்கள் ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லவாடு பகுதியில் மீன்வளத் துறையில் பதிவு பெற்ற இரண்டு படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்த படகுகளளில் இருந்து சுமார் 2 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மீன்களை அதிகாரிகள் 1,10,000 ரூபாய் பொது ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் இரண்டு நாட்டு படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதோடு படகுகளின் பதிவும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 'இந்த தொடர் நடவடிக்கைகள் மேலும் தொடரும்' என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதனிடையே சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாநில அரசு இது சம்பந்தமாக எந்தவித முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் புதுச்சேரியை சேர்ந்த சில மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். புதுச்சரி அரியாங்குப்பத்திற்குட்பட்டட தவளகுப்பத்தின் கடல் பகுதி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காலில் காவல் நிலையத்திற்கு உட்பட்டு வருகிறது. இங்குள்ள மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக  காவல் நிலையம் மற்றும் மீன்வளத் துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் காவல் தமிழக பகுதியில் விசாரணை நடத்தினர். 

 

அது போன்ற நிகழ்வு நடைபெறாததால் ஏமாற்றமடைந்த நிலையில் அருகே புதுச்சேரி பகுதியில் உள்ள மீன்பீடி தளத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்திய இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்வதாகவும் இல்லாவிட்டால் ஒரு படகிற்கு ஒரு லட்சம் வீதம் 2 படகுகளுக்கு 2 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் தொழிலுக்கு செல்ல படகு வேண்டுமே என கருதி ஒரு படகுக்கு ரூபாய் 60 ஆயிரம் வீதம் இரண்டு படகுகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் அபராதம் என வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகைக்கு அவர்களுக்கு எந்தவித ரசீதும் கொடுக்கப்படவில்லை. மேலும் இந்த வசூலில் ஈடுபட்டு காவலர்கள் அதிகாரிகளுக்கு என தலா 5 கிலோ மீன்கள் என சுமார் 70 கிலோ மீன்கள் இலவசமாக எடுத்துச் சென்றதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.