Skip to main content

“15,300 மின்வாரிய ஊழியர்கள் தயார்..” - அமைச்சர் தங்கம் தென்னரசு 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

"15,300 Power Board employees are ready.." - Minister Thangam Thanarasu

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது வடமேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது சென்னையிலிருந்து 510 கி.மீ தொலைவில் இருந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

 

இது புயலாக மாறும்போது அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது; “அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் மின் கம்பங்கள் தயாராக இருக்கின்றன. மாவட்ட கட்டுப்பாட்டு மையங்களில் மின் துறை அலுவலர்கள் களப் பணியாற்றி வருகின்றனர். புயல் கரையைக் கடக்கும்போது கடலோர மாவட்ட மக்களுக்கு மின் விநியோகம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மின்னகத்திற்கு வரும் அழைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய 15,300 மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்