Skip to main content

வன்னியர் என்கிற உணர்வையும் தாண்டி வாழப்பாடி ராமமூர்த்தியை தோற்கடித்தது யார்? ராமதாஸுக்கு மு.ஞானமூர்த்தி கேள்வி

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், "ஏஜி"என அண்ணாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும். ஏற்கனவே கலைஞர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 

இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது வெற்று வாக்குறுதிகள் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். 
 

இந்த நிலையில் ''மருத்துவர் ராமதாஸ் அறிக்கையும்- ஒரு இட ஒதுக்கீட்டுப் போராளியின் குரலும்...'' என்ற தலைப்பில் செந்துறை வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தி ராமதாஸின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்துள்ளார். 
 

ராமதாஸ் : இவற்றையெல்லாம் விட கொடுமை திமுகவில் வன்னியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தான். வன்னியர் ஒருவரை -திண்டிவனம் வெங்கட்ராமன் - முதன்முதலில் மத்திய அமைச்சராக்கியது திமுக தான் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவருக்குப் பிறகு திமுக மொத்தம் 15 ஆண்டுகள்  மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அப்போது வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையாவது கேபினட் அமைச்சராக்கியது உண்டா? 1989 முதல் 2013 வரை மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக மொத்தம் 22 அமைச்சர் பதவிகளைப் பெற்றது. அவற்றில் வெறும் 2 பதவிகள் மட்டுமே 20% மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டிவனம் வெங்கட்ராமன், அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஆனால், மக்கள்தொகையில் 0.01% கூட இல்லாத ஸ்டாலினின் சமுதாயத்திற்கு 6 அமைச்சர் பதவிகள், அதுவும் கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. திமுகவுக்கு உயிர் கொடுத்த வன்னியர்களுக்கு திமுகவில் இவ்வளவு தான் மரியாதை. 
 


போராளி : பாமக ஆரம்பித்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறதே. உங்களோடு போராடி தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஆயரக்கணக்கில் உள்ளதே அதில் உழைத்த இளைஞர்களுக்கு நீங்கள் எம்எல்ஏ, எம்பி, மந்திரிகளாக்கியதுண்டா? எந்த முதன்மை பொறுப்பானாலும் உங்கள் மகன் அன்புமணியை முன்னிருத்துகிறீர்களே இவரை விட தியாகம் செய்தவர்கள், திறமையானவர்கள் உங்கள் கட்சியில் இல்லையா?.
 

ராமதாஸ் : திமுக மாவட்ட செயலாளர்கள் நியமனத்திலாவது வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதா? என்றால் அதுவும் இல்லை. வன்னியர்கள் அதிகம் வாழும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர்,  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 வருவாய் மாவட்டங்களில், திமுகவுக்கு அமைப்பு ரீதியாக மாநகர மாவட்டங்கள் உள்ளிட்ட 29 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் 11 மாவட்ட செயலாளர் பதவி மட்டுமே வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமைப்புரீதியாக 3 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றில் கூட வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மாவட்டச் செயலாளர்களாக ஸ்டாலின் நியமிக்கவில்லை. 

 

vazhapadi ramamurthy - ramadoss


 


போராளி : கூட்டணி தர்மத்தையும் மீறி வன்னியர் என்கிற உணர்வையும் தாண்டி, வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களை சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் தோற்கடித்தது உங்கள் கூட்டம்தானே. அப்போது எங்கே போனது உங்கள் ஜாதி உணர்வு.
 


ராமதாஸ் : திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘ஏ.ஜி’ என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை விட கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் எதுவும் இருக்க முடியாது. ஏ.கோவிந்தசாமி அவர்கள் இன்றளவும் நான் மதிக்கும் தலைவர். அவரது குடும்பத்தினர் இன்றளவும் என்னுடன் தொடர்பில் உள்ளனர். விக்கிரவாண்டியில் ஓட்டுப் பொறுக்க வேண்டும் என்பதற்காக ‘ஏ.ஜி’ அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாகக் கூறும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இரு ஆண்டுகளுக்கு முன் ‘ஏ.ஜி’ அவர்களின் நூற்றாண்டு வந்த போது, திமுக சார்பில் பிரமாண்டமாக விழா எடுத்துக் கொண்டாடியிருக்கலாமே? அவ்வாறு செய்வதை யார் தடுத்தது? ‘ஏ.ஜி’யின் நூற்றாண்டு விழாவை அவரது புதல்வர் ஏ.ஜி.சம்பத் மட்டும் தானே அவரது சொந்த ஏற்பாட்டில் நடத்தினார். குறைந்தபட்சம் அந்த விழாவுக்கு திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் யாரையாவது ஸ்டாலின் அனுப்பியிருக்கலாமே... அதைக் கூட செய்யாதது ஏன்?. 


போராளி : வன்னியர் சமுதாயத் தலைவர்களாக இருந்த எஸ். எஸ். ராமசாமி படையாச்சியார், வன்னிய அடிகளார், ச. சுப்பிரமணியம் ஐஏஎஸ், வாழப்பாடியார், ஏ.கே. நடராசன் இவர்களை என்றைக்காவது நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா?

 

mg



 

 

ராமதாஸ் : திமுக ஆட்சிக்கு வந்தால் ‘ஏ.ஜி’ அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் அவரது புதல்வர் ஏ.ஜி.சம்பத்தை குடும்பத்துடன் சென்னைக்கு அழைத்து வந்து நன்றி கூற வைத்த மு.க.ஸ்டாலின் அவர்கள், இரு வாரத்திற்கு முன் அதே சம்பத் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்த போது அவருக்கு வாய்ப்பு வழங்கி ‘ஏ.ஜி’ அவர்கள் மீதான விசுவாசத்தை நிரூபித்து இருக்கலாமே? 1952-ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலில் இதே விக்கிரவாண்டி தொகுதியில் தானே ‘ஏ.ஜி’ அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கொடுத்த உதயசூரியன் சின்னத்தில் தானே மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், மேயராகவும், அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் ஆனார். அந்த நன்றிக் கடனுக்காகவாவது ‘ஏ.ஜி’ அவர்களின் புதல்வருக்கு ஸ்டாலின் வாய்ப்பளித்திருக்க வேண்டாமா? மாறாக 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 23 ஆண்டுகளாக ‘ஏ.ஜி’ அவர்களின் குடும்பத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பே தராமல் ஒதுக்கி வைத்திருந்ததற்கு காரணம்  வன்னியர்கள் மீதான ஸ்டாலினின் வெறுப்புணர்வு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
 

போராளி : வன்னியர் சங்க கூட்டத்தில் உங்கள் உங்கள் பேச்சைக்கேட்டு கத்திகத்தி தன் உயிரையே விட்ட காடுவெட்டி குரு, மருத்துவத் தொழிலையும் மறந்து உங்களுக்காக உழைக்கும் விருத்தாசலம் டாக்டர் ஆர். கோவிந்தசாமி, இளமையை பலியிட்டு இனத்திற்காக உழைக்கும் புதா. அருள்மொழி, மக்கள் பிரச்சனையை ஊடகத்தின் முன்நிறுத்தும் நீதியின் குரல் சிஆர் பாஸ்கரன், பாட்டாளி தொழிற்சங்க சங்கத் தலைவர் இராம. முத்துக்குமார் , வழக்கறிஞர் குபேந்திரகுணபாலன், மாயவரம் கொற்றவமூர்த்தி, விருத்தாசலம் தச்சினாமூர்த்தி, சேத்தியாதோப்பு இமையவரம்பன், சிட்டிபாபு, சிதம்பரம் மணிவண்ணன் , நெய்வேலி வாழைச்செல்வன், பாசிக்குளம் திருஞானம், அரியலூர் அறிவழகன், இப்படி பல ஆண்டுகாலம் எந்தப் பலனையும் அனுபவிக்காத இவர்களுக்கு நீங்கள் வாங்கி கொடுத்த பதவிகள்தான் என்ன?


 

சார்ந்த செய்திகள்