Skip to main content

"உதிப்பாரா" உதயநிதி ஸ்டாலின்..?

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

திமுகவின் இளைஞரணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 1980ம் ஆண்டு மதுரையில் திமுகவின் இளைஞரணி தொடங்கப்படுகிறது. அதன் முதல் செயலாளராக மு.க ஸ்டாலின் நியமிக்கப்படுகிறார். ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்கும் வரையில் இளைஞரணியின் செயலாளராக கிட்டதட்ட 35 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்துள்ளார். திமுக தலைவரான பிறகு, அந்த பொறுப்பை முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வசம் ஒப்படைத்தார். சாமிநாதன் கடந்த மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், அப்பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே, கடந்த சில மாதங்களாகவே உதயநிதியை சுற்றி பல்வேறு சர்ச்சைக்கள் எழுந்தது. உதயநிதிக்கு இளைஞரணி பொறுப்பு வழங்கப்படுமா? என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. "எனக்கு எந்த பதவி வேண்டாம், திமுகவில் உறுப்பினராக இருப்பதே பெரிய மகிழ்ச்சி" என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புவரை கூறிவந்த உதயநிதிக்கு, தற்போது திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

 

udhayanithi stalin entry to politics

 
 

திமுகவின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை போன்று, இளைஞர் அணியின் மூன்றாவது செயலாளராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 80-களின் ஆரம்பத்தில் மு.க ஸ்டாலின் இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்ற போது, அவருக்கு இருந்த அத்தனை சவால்களும் தற்போது உதயநிதிக்கும் உள்ளது. ஏனென்றால் அப்போதும் திமுக எதிர்கட்சியாகத்தான் இருந்தது, தற்போதும் இருக்கிறது. அப்போது திமுகவிற்கு எம்.ஜி.ஆர் என்ற ஒரு ஆளுமையே எதி்ர்வரிசையில் இருந்தார். தற்போது திரும்பிய பக்கம் எல்லாம் திமுகவை அழிக்க ஆட்கள் முளைத்துவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் திமுகவின் மிக முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளார் உதயநிதி. இந்த பொறுப்புக்கு உதயநிதி தகுதியானவரா என்று ஒரு பக்கம் கேள்வி எழுந்தால், அவருக்கு என்ன தகுதியில்லை என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் அவருக்கு நெருக்கமானவரகள். அதற்காக அவர்கள் காரணங்களையும் அடுக்குகிறார்கள். 
 

இதுகுறித்து அவர்கள் பேசும்போது, " கடந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வர்கள் என்று பார்த்தால் அது இரண்டு பேர்தான். ஒருவர் தலைவர் ஸ்டாலின், மற்றொருவர் உதயநிதி. திமுக பெற்ற இந்த மகத்தான வெற்றிக்கு உதயநிதியும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் பட்டித்தொட்டியெல்லாம் உதயநிதி பிரச்சாரம் செய்தார். சொல்லப்போனால் தமிழகத்தில் அவர் காலடிபடாத நாடாளுமன்ற தொகுதியே இல்லை என்ற அளவுக்கு அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார். அந்த பிரச்சாரம் எதுவும் வீண் போகவில்லை. அது அனைத்தும் வாக்குகளாக விழுந்துள்ளது. நீங்கள் கலைஞர் போன்று ஸ்டாலினிடமும், ஸ்டாலின் போன்று உதயநிதியிடமும் செயல்பாடுகளை எதிர்பார்த்தால் அது தவறு. அவரவர்களுக்கு என்று என்று ஒரு மாடல் இருக்கிறது. ஸ்டாலினை போன்று உதயநிதியும் கடுமையான உழைப்பாளி தான். அதை கடந்த தேர்தலில் தமிழகமே நேரில் கண்டது. இனி முழுநேரமும் உதயநிதி அரசியல் பணிகளில் ஈடுபடுவார். அவர் இலக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தல்தான். 1971 ஆம் ஆண்டு திமுக பெற்ற வரலாற்று வெற்றியை முறியடித்து 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்து வெற்றிபெற வேண்டும் என்பதே அவரின் இலக்கு. அதை அவர் சிறப்பாக செய்து முடிப்பார்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.