Skip to main content

“சசிகலாவின் இந்த நிலைக்கு டிடிவி தான் காரணம்” - திவாகரன் பேட்டி!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

TTV is the whole reason for this situation of Sasikala

 

சசிகலா சிறை சென்றதற்கும், தற்போது அரசியலிருந்து வெளியே சென்றதற்கும் முழுமையான காரணம் டி.டிவி. தினகரன்தான் எனக் கடுகடுக்கிறார் திவாகரன். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரும் வி.கே. சசிகலாவின் சகோதரருமான திவாகரன் அவரது கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திவாகரனிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. 

 

ஜெயலலிதா, கலைஞர் என இருபெரும் தலைவர்கள் மறைவு, சசிகலா அரசியலில் இருந்து விலகல் என பல அதிரடிகளுக்கு இடையே நடக்கும் இந்த தேர்தல்குறித்து உங்கள் பார்வை ?


“இது ஜனநாயகத் திருவிழாவைப்போலத் தெரியவில்லை, கூட்டு வியாபாரத்திற்கு முயற்சி செய்யும் திருவிழாவாகத் தான் இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. இந்தச் சூழலில் இலவசங்களை ஆளும் கட்சியும், தற்போது ஆண்ட கட்சியும் தேர்தல் அறிக்கையாக அள்ளி வீசுகின்றன. அதே வேளையில், அதிமுக பல இக்கட்டான சூழலிலும் வேட்பாளர் தேர்வில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இதுவே, அவர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

 

இந்த தேர்தலில் அண்ணா திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது ?


“நாங்கள் யாருடனும் கூட்டணியில்லை. யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. தனித்து 'தொப்பி' சின்னத்தில் போட்டியிடுகிறோம். ஜெயலலிதா இருக்கும்போதே துணிந்து திமுகவை எதிர்த்து அரசியல் செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அவங்களுக்குப் பாதுகாப்பு இல்லை, ஆனாலும் அவர்கள் இன்னும் அதிமுக தொண்டர்களாக தான் இன்னும் இருக்கிறார்கள். நாங்கள் முதற்கட்டமாக 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். இரண்டாம் கட்டப் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்.

 

TTV is the whole reason for this situation of Sasikala

 

சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா?


“சசிகலா ஒய்வு எடுப்பதாகக் கூறியிருப்பதை உள்ளபடியாக நான் வரவேற்கிறேன். சரியான நேரத்தில் பல சங்கதிகளைக் கூட்டிக்கழித்துப் பார்த்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஆனால், இதில் சூழ்ச்சி உள்ளது. சசிகலா சிறை சென்றதற்கும், அரசியலிருந்து வெளியே சென்றதற்கும் முழுமையான காரணமே டி.டிவி தினகரன் தான். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை நான்தான் முதல்வராகத் தேர்வு செய்யச் சொன்னேன். அதன் படி செய்தார்கள்.

 

ஆனால் ஒரு சில நாட்களிலேயே தினகரன் பேச்சைகேட்டுக் கொண்டு முதல்வராக சசிகலா ஆசைப்பட்டார். அதன் விளைவாகத்தான் சிறைக்குச் சென்றார். ஜெயலலிதா உடன் இருந்ததிலிருந்தே சசிகலா கஷ்டத்தை தான் அனுபவித்து வருகிறார். எடப்பாடியை முதல்வராகக் கொண்டுவர கூவத்தூரில் பல நெருக்கடியைச் சந்தித்தவர் சசிகலா. மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடர பல பிரார்த்தனைகள் செய்தவர் சசிகலா. டி.டி.வி தினகரன் ‘நானே ராஜா நானே மந்திரி’ என நினைக்கிறார். சசிகலாவை மட்டம் தட்ட வேண்டும் எனப் பலர் நினைக்கிறார்கள். அது அரசியல் புரிதல் இல்லாமையே காரணம்.

 

அமமுகவில் முதல்வர் வேட்பாளர் நான்தான் என மூன்றாவது அணி அமைத்து டி,டி,வி தேர்தலில் களம் இறங்குவது குறித்து?


“தூங்குகிறவர்களை எழுப்பலாம், தூங்குகிற மாதிரி நடிக்கிறவர்களை எழுப்ப முடியாது. தான் முதல்வராக வரவேண்டும் என்று அமமுக கட்சியை உருவாக்கி அதில் அதிமுக தொண்டர்களை இணையச் சொன்னார் டிடிவி, இது பெரும் நகைச்சுவையாக உள்ளது. அதிமுக எவ்வளவு பெரிய கட்சி, எவ்வளவு பெரிய ஆட்களால் வளர்ந்த கட்சி, எத்தனை ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்த கட்சி, அந்த கட்சியை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் மாதிரியான அமமுக கட்சியோடு இணைத்துக்கொள்வதாகக் கூறுவது என்பது எவ்வளவு புரிதல் அற்றது. இதன் மூலமாகத்தான் கட்சி உடைந்துபோனது. தினகரனின் கனவு பலிக்காது” என்கிறார்.

 

இனி, சசிகலா அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? 


“நிச்சயமாக சசிகலா அரசியலுக்கு வரமாட்டார். நானும் அவரை அரசியல் நிலைப்பாடு குறித்து சந்திக்க மாட்டேன். என்னை பலமுறை சசிகலா உதாசினப்படுத்தினார். பல துயரங்களைச் சந்தித்துவிட்டார். நான் சொல்வதை சசகிலா கேட்கவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு நான் சொன்னேன், உங்களைப் பொதுச்செயலாளர், முதல்வர் என ஆசைகாட்டி வலைவிரிப்பார்கள், நீங்க எந்தப் பொறுப்புக்கும் ஆசைப்படாத கிங் மேக்கராகவே இருக்கனும், என்றேன்.

 

அதோடு வயதான காலத்தில் அரசியலை விட்டுட்டு உங்க வீட்டுக்காரரோடு சேர்ந்து கடைசி காலத்தைக் கழிங்கன்னு சொன்னேன். அதையும் கேட்டுக்கல. அக்கா சசிகலாவும், அத்தான் நடராஜனும் சேர்ந்து வாழனும்னு அக்கா குடும்பத்திலோ, அத்தான் குடும்பத்திலோ யாரும் விரும்பல. ஓரே ஆள் நானும் என்னோட மகனும் தான் விரும்பினோம். இதுவரை நீங்க பட்ட துயரம் போதும், அரசியலை தூக்கிப்போட்டுட்டு சேர்ந்து வாழுங்கன்னு கண் கலங்கி சொன்னோம். அதையும் அவங்க கேட்கல, அதனால் எதற்காகவும் அவரைச் சந்திப்பதாக இல்லை” என்கிறார் திவாரகன்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகத்தை வளர்க்க பத்திரிகை மிக முக்கியம்” - பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா

Published on 17/03/2023 | Edited on 18/03/2023

 

Justice D Raja said that journalism is very important   development  democracy

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க வரும் காட்சி ஊடகத்தினர் பேட்டி எடுக்க தனியிடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை வைத்தார்.

 

சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத்தை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா துவக்கி வைத்தார். சங்கத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் மின்னணு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் இருந்து செய்திகளை வழங்கி வரும் நிலையில் அவர்களுக்காக சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பதிவு செய்யப்பட்ட இந்த சங்கத்தை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா துவக்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஏ.சுப்ரமணி தலைவராகவும், சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் டி.ரமேஷ்குமார் செயலாளராகவும், துணைத் தலைவராக ராம்ஜியும் தேர்வாகியுள்ளனர்.

 

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, மூத்த பத்திரிகையாளர் பி.எஸ்.எல்.பிரசாத் நினைவு சொற்பொழிவாற்றினார். ஊடகங்களும் லட்சுமண ரேகையும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றிய அவர், ஜனநாயகத்தில் பத்திரிகைகள் முக்கியமானவை என்றும் அரசியல் சாசனத்தின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரமே பத்திரிகை சுதந்திரம் என்றும் குறிப்பிட்டார். பத்திரிகைகள் தங்கள் வரம்பை மீறாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஊடக விசாரணை என்ற பெயரில் ஒருவர் மீது குற்றம்சாட்டி பின் நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்படும் போது அந்த நபருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஈடுகட்ட முடியாது என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி சுட்டிக் காட்டினார்.

 

பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உரை, “லட்சுமண ரேகையை பின்பற்றியவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கியுள்ளேன். சட்டம் இயற்றும் சட்டமன்றத்தின் அதிகாரத்தில் அதிகாரிகள் தலையிடும் போது நீதித்துறை தலையிடும். சட்டமன்றம், அதிகாரிகள், நீதித்துறை ஆகிய அமைப்புகளுக்கு பிறகு நான்காவது தூணாக பத்திரிகைத் துறை உள்ளது. வரம்பை தாண்டாமல் பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் பின்தொடரும். போஸ்ட் கார்டை கூட நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொள்ள முடியும். அதுதான் பொது நல வழக்கு. நீதிமன்றத்தை அணுக முடியாதவர்களுக்கு பொது நல வழக்கு பலன் தரும். அதற்கு பத்திரிகையாளர்கள் தான் காரணம். அனைவருக்கும் கருத்து, பேச்சு சுதந்திரம் உள்ளது. பத்திரிகைக்கு என தனி உரிமை இல்லை. கருத்து, பேச்சு சுதந்திரம் தான் பத்திரிகைகளுக்கான சுதந்திரம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “2002-22 -வரை உள்ள கால கட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேல் பத்திரிகைகள் உள்ளன. பொள்ளாச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கும் முன், குறிப்பிட்டவரின் மகன், சகோதரர் சம்பந்தப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்லத் துவங்கி விட்டனர். ஊடக விசாரணை என்ற பெயரில் இவர்கள் அப்பாவி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு இழைத்த அநீதியை சரிப்படுத்த முடியாது. லட்சுமண ரேகையை பின்பற்ற வேண்டும். காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தால் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க முடியாது. செய்திகளை வெளியிடும் முன் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

 

1950ல் மும்பையைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் வெளியிட்ட பத்திரிகைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. முதல் பிரதமரின் வெளியுறவு கொள்கையை விமர்சித்த அந்த பத்திரிகைக்கு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செய்தி தெரிவிப்பது நாட்டுக்கு முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. வரம்புகளை மீறும்போது வரும் பின் விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை வளர்க்க பத்திரிகை முக்கியம் அதுமட்டுமல்லாமல் நியாயமாக நடக்க வேண்டும். ஜனநாயகத்தில் 4 தூண்கள் மட்டுமே உள்ளது. அதில் 4வது தூண் தான் ஊடகங்கள். இந்திய அரசியல் அமைப்பில் 19வது சரத்தில் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை அடிப்படையில் ஊடகங்கள் நான்காவது தூணாக கருதப்படுகிறது. ஏழை எளிய சாமானிய நபர்களும் நீதிமன்றத்தை நாடலாம் என்று ஆழமாக விதைக்க முக்கிய காரணம் ஊடகங்கள். சில வழக்குகளில் நீதிமன்றம் சொல்லும் முன்பே பத்திரிகைகள், இவர் குற்றவாளி என்று சொல்வது நடக்கிறது.  இது எப்படி சரியாக இருக்கும்.? வழக்கு விசாரணை நடந்து நீதிமன்றத்தில் குற்றவாளி இல்லை என்ற நிலை கூட வரலாம். ஆனால் அவர் குற்றவாளி என்று பத்திரிகை எழுதிய பிறகு அவர் சமுதாயத்தில் சாதாரணமாக நடக்க முடியுமா? அதனால் தான் பத்திரிகைகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். 

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க வரும் காட்சி ஊடகத்தினர் பேட்டி எடுக்க தனியிடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜாவை கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஓய்வூதியம்; முதல்வருக்கு நன்றி தெரிவித்த பத்திரிகையாளர் சங்கம்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

jkl


"தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்" மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் டி.இளையராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது, " தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கிய நிகழ்வு பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

 

"தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்" சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். மேலும், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவோம் என அறிவித்தார். அதன்படியே செயலாற்றியும் வருகிறார்.

 

பத்திரிகையாளர்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு,  அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.  2022-23ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 இலட்சம் ரூபாயிலிருந்து 4 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

 

அதன்படி நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு இன்று ஆணைகளை வழங்கியுள்ளார்.

 

அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பாகவும் மற்றும் நமது "தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்" சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மேலும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ம.சு. சண்முகம் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., செய்தித் துறை துணை இயக்குநர் மேக வண்ணன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என தமது நன்றி அறிக்கையில் கூறியுள்ளனர்.