Published on 19/06/2019 | Edited on 19/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.கடந்த 2014 ஆம் ஆண்டு வாங்கிய வாக்கு சதவிகிதத்தை விட மிக குறைந்த ஓட்டு சதவிகிதம் மட்டுமே இந்த தேர்தலில் அதிமுக வாங்கியது. மேலும் அதிமுகவுடன் கூட்டணி வாய்த்த அனைத்து கட்சிகளும் படு தோல்வியையே சந்தித்தது.இது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் அடுத்து வரும் இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுக தலைமை ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இதனால் கடந்த வாரம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்த முதல்வர் கட்சி நிர்வாகிகளிடம் அடுத்த தேர்தலில் வெற்றி பெற பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை ஏற்கலாமா என்று கேட்டுள்ளார்.இதற்கு ஓபிஎஸ் வேண்டாம் என்று சொன்னதாக தெரிவிக்கின்றனர்.இது பற்றி விசாரித்த போது,பிரசாந்த் ஏற்கனவே திமுகவுடன் நெருக்கமாக உள்ளார்.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பிரசாந்த் கிஷோருக்கு ரொம்பவே நெருக்கமானவர்.
ஆகையால் அவரிடம் நாம் ஆலோசனை கேட்டால் அந்த திட்டம் திமுகவிற்கு எளிதாக தெரிந்து விடும். அதனால் அவரின் ஆலோசனையை கேட்க வேண்டாம் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டதாக சொல்கின்றனர். மேலும் திமுக பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை படி தான் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்தினர் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.