Skip to main content

உங்களை விட 100 மடங்கு உணர்வு எங்களுக்கு உள்ளது: எடப்பாடி பழனிசாமி

Published on 15/07/2019 | Edited on 15/07/2019


   
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக எம்எல்ஏ தங்கம்தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

 
தங்கம்தென்னரசு:- தபால்துறையில் போட்டித் தேர்வுகளை ஆங்கிலம்-இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்று அறிவித்து அதன்படி நேற்று தேர்வு நடந்து இருக்கிறது. கடந்த மே மாதம் 14-ந்தேதி அனைத்து மாநில மொழிகளிலும் தபால் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள். இந்தியை திணிக்கவும், தமிழை ஒதுக்கவும் திட்டமிட்டு மத்திய அரசு இதை செய்திருக்கிறது.
 

எனவே தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையிலும் அவர்களின் உரிமையை பாதுகாக்கவும் தமிழில் தபால் துறை தேர்வு எழுத அனுமதிக்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

 

eps


அமைச்சர் ஜெயக்குமார்:- தபால் துறை தேர்வின் முதல் தாளை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டும் எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு முதல் தாள் தேர்வு நடந்து இருக்கிறது. 2-வது தாளை தமிழிலும் எழுதலாம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. முதல் தாள் ஆங்கிலம், இந்தியில் மட்டும் தான் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதை உறுப்பினர் தெரிவித்தார்.
 

இருமொழி கொள்கைகளில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. மாநில மொழிகளுக்கும் மத்திய அரசு உரிய உரிமை கொடுக்க வேண்டும் என்பதை இந்த அரசு வற்புறுத்தும். பாராளுமன்றத்தில் இதற்காக உங்கள் உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்களும் குரல் கொடுப்பார்கள். நமது உரிமையை நிலைநாட்ட இந்த அரசு முயற்சி எடுக்கும்.


 

 

சட்டப்பேரவை திமுக துணைத் தலைவர்:- அமைச்சர் அளித்த பதில் அழுத்தமாக இல்லை. இருமொழி கொள்கை என்கிறார். ஒருமித்த கருத்து இருக்கிறது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று குறிப்பிடாமல் வற்புறுத்துவோம் என்று பதில் அளித்து இருக்கிறார்.
 

அமைச்சர் ஜெயக்குமார்:- இருமொழி கொள்கை தான் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 37 பேரும், எங்கள் பாராளுமன்ற உறுப்பினரும், மேல்சபை உறுப்பினர்களும் வற்புறுத்த வேண்டும் என்பதை தான் தெரிவித்தேன்.
 

துரைமுருகன்:- எங்கள் உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள். அதுபற்றி பிரச்சனை இல்லை. அதை விட நாம் அனைவரும் இணைந்து 234 உறுப்பினர்கள் கொண்ட இந்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது தான் பலமிக்கதாக இருக்கும். அதுபற்றி அமைச்சர் குறிப்பிடவே இல்லை.
 

dmk mlas


 

சபாநாயகர்:- அமைச்சர் அரசு தரப்பில் விளக்கம் சொல்லிவிட்டார்.
 

துரைமுருகன்:- இந்தியை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றீர்கள். இதை தீர்மானமாக கொண்டு வந்து வற்புறுத்தலாமே? நமது வெறுப்பை காட்ட வற்புறுத்துவதாக தீர்மானம் கொண்டு வந்தால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது. இங்குள்ள 2 பிரச்சனை. இந்தி திணிப்பு. அதை எதிர்த்து தீர்மானம் உண்டா? இல்லையா?
 

ஓ.பன்னீர்செல்வம்:- தபால்துறை தேர்வுகளில் தமிழில் தான் முன்பிருந்தபடி நடத்த வேண்டும் என்பது நம் ஒட்டுமொத்தோரின் கருத்தாக உள்ளது. இந்த பிரச்சனை குறித்து பாராளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் நாளை அ.தி.மு.க. சார்பில் பிரச்சனை எழுப்பப்படும். அங்கு இதற்கு என்ன முடிவினை மத்திய அரசு சொல்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் நமது முடிவு எடுக்கப்படும்.


 

congress mlas

துரைமுருகன்:- துணை முதல்-அமைச்சர் மிக சாதூர்யமாக பதில் சொல்கிறார். நாளைக்கு அங்கு என்ன நடக்கும் என்றால் சபையை ஒத்தி வைத்து விடுவார்கள். எனவே இங்கு நம் மன்றத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தான் கேட்கிறேன்.
 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- துணை முதல்-அமைச்சரும், அமைச்சரும், தெளிவாக பதில் சொல்லி உள்ளனர். இந்த விதியை போட்டது மத்திய அரசு. பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு வாதாடுவதற்கான வாய்ப்பினை நாம் வழங்கி இருக்கிறோம். எனவே அவர்கள் அங்கு வாதாடுவதில் என்ன தவறு உள்ளது. பாராளுமன்றத்தில் ஒரு பிரச்சனையை எழுப்பும் போது தான் அங்கு என்ன பதில் சொல்கிறார்கள்? என்பதை வைத்து ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். அதன் பிறகு நாம் அதற்கேற்ப முடிவு எடுக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முடிவோடு இங்கு வந்துள்ளீர்கள். எப்படியும் வெளிநடப்பு செய்யும் எண்ணத்துடன் வந்திருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். இந்த பிரச்சனையில் உங்களுக்கு உள்ள உணர்வு தான் எங்களுக்கும் உள்ளது. பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர் என்ன சாதித்தீர்கள்? எங்களை கேள்வி எழுப்பினீர்களே? இப்போது உங்கள் உறுப்பினர்கள் 37 பேர் இருக்கிறார்களே அவர்கள் இதைப்பற்றி அங்கு பேச வேண்டியது தானே. இந்த வி‌ஷயத்தில் நாளை வரை பொறுத்திருக்க மாட்டீர்களா?


 

 

துரைமுருகன்:- இது ஒரு உணர்வுபூர்வமான பிரச்சனை. இந்தி திணிப்பு பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரச் சொல்கிறோம். ஆனால் நீங்கள் இதை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதால் அதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தி.மு.க. உறுப்பினர்கள் காரணம் தேடித் தேடி பார்த்தார்கள். இப்போது இந்த பிரச்சினையை சாக்காக வைத்து வெளிநடப்பு செய்துள்ளனர். எங்களை பொறுத்தவரை உங்களை விட (தி.மு.க.) 100 மடங்கு உணர்வு எங்களுக்கு உள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவையிலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள்.
 

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.