Skip to main content

‘ஒருவருக்கு ஒரு பதவி’ ஆத்தூரில் தொடங்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

Minister I. Periyasamy launches 'One post for one' in Attur!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்பதை தனது ஆத்தூர் தொகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னெடுத்துள்ளார். இது அந்த மாவட்ட திமுகவினரிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 99 சதவீதம் வெற்றியை ஐ. பெரியசாமி உறுதி செய்தார். பெரும்பாலான இடங்களில் மாநகர, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் மற்றும் அவரது துணைவியார் தலைவர், துணைத் தலைவராக ஆக்கப்பட்டனர். எதிர்பார்த்த பலர் ஏமாற்றம் அடைந்த நிலையில், அவர்களை திருப்திப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார் ஐ. பெரியசாமி.


கட்சி மற்றும் ஆட்சி அதிகாரம் ஒருவரிடம் மட்டுமே இருப்பதை விரும்பாத ஐ. பெரியசாமி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் தலைவராக இருப்பவர்கள் செயலாளர்களாக இருப்பதை தவிர்க்கும் விதமாக தனது தொகுதியான ஆத்தூரில் அய்யம்பாளையம் பேரூர் செயலாளராக செயல்பட்டு வரும் தனது உறவினரான  ஐயப்பனை பதவியை ராஜினாமா செய்ய வைத்து தங்கராஜ் என்பவருக்கு பேரூர் பொறுப்பாளர் பதவி வழங்கி உள்ளார். 


இதேபோல் கன்னிவாடி பேரூர் செயலாளர் சண்முகத்திற்கு பதில் இளங்கோவன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆத்தூரில் தனது ஆட்டத்தைத் தொடங்கி வைத்துள்ள அமைச்சர் ஐ. பெரியசாமி மாவட்டம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவராக செயல்படும் திமுக செயலாளர்களின் பதவி வேறு ஒருவருக்கு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் வரும் உட்கட்சித் தேர்தலில் நீண்ட நாட்களாக நகர, பேரூர் செயலாளர்களாக நீடித்து வந்த பலரையும் தூக்கிவிட்டு புதியவர்களை நியமிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்