Skip to main content

மாஜி பாஜக அமைச்சருக்கு கொலை மிரட்டல்; மகளுக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்; ம.பி.யில் பரபரப்பு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Minister and his daughter threatened in Madhya Pradesh

 

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டலும் அவரது மகளுக்கு ஆசிட் வீச்சு மிரட்டலும் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெயபான் சிங் பாவையாவின் மகள் சமீதா சிங். இவர் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீதா சிங்கிற்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் ஜெயபான் சிங் இரு மாதங்களில் கொலை செய்யப்படுவார் என்றும் அவரது மகள் சமீதா சிங் மீது ஆசிட் வீச்சு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இவ்விவகாரம் குறித்து சமீதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

ஜனக்கஞ்ச் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத அந்த நபர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் சமீதா பணிபுரியும் கல்லூரியில் அவர் உடன் பணியாற்றும் மற்றொருவருக்கு எதிரான போக்கை கைவிடும்படி கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லை எனில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த வருடம் நவம்பர் மாதம் இறுதியில் இந்தக் கடிதத்தை சிங் பெற்றதாகவும் சமீபத்தில் தான் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் இது குறித்து தொடர்ச்சியான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டலும் அவரது மகளுக்கு ஆசிட் வீச்சு மிரட்டல் குறித்த செய்தி மத்தியப் பிரதேசத்தின் அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.