
தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளிவரும் என அண்ணாமலை கூறியதற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதில் அளித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “பொறுப்புள்ள கட்சியாக நாங்கள் ஏற்கனவே சொல்லியுள்ளோம். அடுத்தகட்ட பட்டியலை வெளியிட நாங்கள் தயாராக உள்ளோம். நிச்சயமாக இரண்டு மூன்று அமைச்சர்கள் உள்ளனர். ஆதாரங்களைத் திரட்டியுள்ளோம். முதல் அமைச்சர் அமைச்சரவையை மாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளார். நாங்கள் விரைவில் வெளியிடுகிறோம்” எனக் கூறியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அமைச்சர் செஞ்சி மஸ்தான், “ஜனநாயகத்தில் யாருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. அதில் குறிப்பாக அவர் சொல்லுகிறார் என்றால் முதலில் சொல்லட்டும். அதற்கேற்றார் போல் நடவடிக்கைகளை மேற்கொண்டு முக.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அமைச்சர்கள் பதில் சொல்லுவோம். மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. முதலில் அவர் சொல்லட்டும்” எனக் கூறியுள்ளார்.