Skip to main content

நீதிபதி கர்ணன் அரசியல் கட்சியைத் தொடங்கினார்!

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

நீதிபதிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பு கிளப்பிய நீதிபதி கர்ணன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். 

 

Karnan

 

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன். இவர் மூத்த நீதிபதிகள் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்தித்தார். இதையடுத்து, ஆறுமாத காலம் சிறைத்தண்டனை அனுபவித்த நீதிபதி கர்ணன், ஐந்து மாதங்களுக்கு முன்னர் விடுதலையானார். 

 

இந்நிலையில், நீதிபதி கர்ணன் தனது அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஊழலுக்கு எதிரான மாற்றுக் கட்சி (Anti - Corruption Dynamic Party) என்ற அக்கட்சியின் பெயரையும் அவர் அறிவித்தார். நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் ஊழலை ஒழிப்பதே தனது கட்சியின் கொள்கை என அவர் தெரிவித்திருக்கிறார். 

 

மேலும், அடுத்தாண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக கூறியுள்ள அவர், சமூகத்தில் அனைத்து பாகுபாடுகளையும் சந்திக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது அத்தியாவசியம் என குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், தனது கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றால் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பிரதமராகும் வாய்ப்பை சுழற்சிமுறையில் வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இருப்பினும், தனது கட்சிக்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் இன்னமும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பது தமிழகத்திற்கு அவமானம்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 23/02/2018 | Edited on 23/02/2018


 

kamal-kejriwal


விழுப்புரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துகள். இடதுசாரிகள் திராவிடத்தை ஏற்றுக்கொண்டனரா? கொச்சையான முறையில் திராவிடத்தை பரிமாறி இருப்பது நமக்கெல்லாம் அவமானம். தமிழர்கள் மற்றும் அவர்களின் தன்மானத்தை எல்லாம் இந்த நேரத்தில் அடுத்த மாநில முதல்வர்கள் சொல்லி தருகிறார்கள்.
 

கெஜ்ரிவாலுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம். தமிழ் பற்றியும், தமிழகம் பற்றியும் ஒன்றுமே தெரியாத கெஜ்ரிவாலை வைத்து கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பது தமிழகத்திற்கு அவமானம். கமல்ஹாசனை பற்றி ஒருவர் காகிதப்பூ மணக்காது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், தன்னை விதை என்று கூறியுள்ளார். அப்படியென்றால் கமல்ஹாசனை காகித விதை என்று சொல்லலாமா? என்னை பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சி என்று பார்த்தால் ஏமாற்றம்தான் என்றார்.

 

ponnar


 

மேலும் பேசிய அவர், வருகிற 24, 25–ந்தேதிகளில் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். குறிப்பாக 50 ஆண்டுகள் நிறைவடைந்த விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதியில் ஆரோவில் இருந்தாலும் தமிழகத்தில் அடங்கியிருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. பிரதமர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
 

தமிழகத்தை பொறுத்தவரை பிரதமரின் செல்வாக்கு அபரிமிதமாக இருக்கிறது. பா.ஜ.க.வின் செல்வாக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது. எந்த பிரதமரும் காட்டாத பாசத்தை, அன்பை நரேந்திரமோடி, தமிழ்மொழி மீதும், தமிழர்களின் மீதும் காட்டி கொண்டிருக்கிறார். எந்தவொரு இடத்திலும் தமிழின் பெருமையை நிலைநாட்டுவதற்கு அவர் தயங்கியதே கிடையாது. இவ்வாறு கூறினார்.