Skip to main content

ஜெ. படத்தை தூக்கி வீசிய அமைச்சர் ஆதரவாளர்கள்... நகராட்சியில் பரபரப்பு!!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

 

mannai sudha

 

 

மன்னார்குடி நகராட்சியில் தொடர்ந்து பல பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளது. நகராட்சி சொத்துகளை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்த பிரச்சனை  சமீபத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில்தான் மன்னார்குடி நகராட்சியில் சேர்மன் அறையில், 2015 ல் சிறந்த நகராட்சி என்று நகராட்சி தலைவராக இருந்த அ.தி.மு.க சுதா அன்புச்செல்வனுக்கு, மாஜி முதல்வர் ஜெ. விருது வழங்கிய படம் மாட்டப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அமைச்சர் காமராஜ் அக்கா மகன் ஆர்.ஜி.குமாரின் அடிபொடிகளான குட்டிமணி, கோபி ஆகியோர் நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து மது விருந்து நடத்திவிட்டு, பிறகு ஜெ., சுதா அன்புச்செல்வன் இருந்த படத்தை தூக்கி உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர். 

 

இந்த தகவல் வெளியே கசிந்து ர.ர.க்களே பிரச்சனையை கிளப்பிய நிலையில், கரோனா பாதுகாப்புக்கு என்று நகராட்சி அலுவலகத்தை பூட்டி வைத்து வெளி ஆட்களை உள்ளே அனுதிக்கவில்லை. மாஜி சேர்மன் சுதா பிரச்சனையை வெளியே கொண்டு போவேன் என்று சொன்ன பிறகு அவசர, அவசரமாக நகராட்சி நிர்வாகம் படத்தை திரும்ப வைக்கும் முயற்சி செய்துள்ளது. இது முதல் முறை அல்ல, 3வது முறை அதனால் அமைச்சர் வரை இந்த பிரச்சனையை கொண்டு போய் நீதி கேட்க மாஜி தரப்பு தயாராகி வருகிறது.

 

இது குறித்து விபரம் அறிந்தவர்கள் கூறும்போது, “மாஜி சேர்மன் சுதா அன்புச்செல்வன் அ.தி.மு.க தான் என்றாலும் அமைச்சர் காமராஜ் அக்கா மகன் ஆர்.ஜி.குமார் ஆதிக்கம் அதிகம். இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறந்த நகராட்சி என்று 2015 ல் ஜெ சான்றிதழ் கொடுத்ததோடு ரூ.10 லட்சம் பணமும் கொடுத்தார். அந்த பணத்தில் ஒரு படிப்பகம் கட்டப்பட்டது. அந்த படிப்பகத்தில் ஜெ., சுதா படம் மாட்டப்பட்டிருந்தது. அதை மர்ம நபர்கள் உடைத்துவிட்டனர். அதன் பிறகு அந்த இடம் காலியாகவே உள்ளது. அதன் பிறகு கடந்த உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது, நகராட்சி அலுவலகத்தில் சுதா பெயருடன் இருந்த மின்விளக்கு பதாகையை  உடைத்து வீசினார்கள். அப்போதும் மாஜி தரப்பு கேள்வி எழுப்பிய பிறகு மின்விளக்குகள் சரிசெய்யப்பட்டது.

 

இந்த நிலையில்தான் 27 ந் தேதி ஆர்.ஜி.குமாரின் ஆட்களான் குட்டிமணியும், கோபியும் நகராட்சி அலுவலகத்திற்குள் குடித்து கும்மாளம் போட்டதோடு முன்னாள் முதல்வர் ஜெ – சுதா இருந்த படத்தை தூக்கி வீசி உடைத்துவிட்டு சென்றுள்ளனர். இவர்களை எப்படி நகராட்சி நிர்வாகம் அலுவலகத்திற்குள் அனுமதித்தது என்பதுதான் கேள்வி. அமைச்சர் மற்றும் அவரது அக்கா மகன் பவரைப் பயன்படுத்தி இப்படி உள்ளே நுழைந்து ஜெ படத்தை தூக்கி வீசி உள்ளனர். 

 

ஜெவின் ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி அமைச்சரவையில் அமைச்சராக உள்ள காமராஜ் ஆட்களே ஜெ. படத்தை தொடர்ந்து அவமதிப்பதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்களால் ஏற்க முடியவில்லை. அதனால் ஜெ. படம் உடைக்கப்பட்டதற்கு அமைச்சரே  காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்