Skip to main content

“நாடாளுமன்றமே நிராகரித்த சொல் ‘எக்னாமிக்கலி’; மடைமாற்றும் திருகு வேலை வேண்டாம்” - முதல்வர் பேச்சு

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு குறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், ''சமூகத்தில் முன்னேறிய சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய பாஜக அரசின் திட்டம். இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லி வந்த சிலர் இன்று இந்த இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். இதன் சூட்சமத்தை நான் விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை.

 

அரசியல் லாப நோக்கங்கள் குறித்து இந்த இடத்தில் பேச விரும்பவில்லை. எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது. முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த போது 'எக்னாமிக்கலி' என்ற சொல்லையும் சேர்க்கச் சொல்லி சில உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். இதனை பிரதமர் நேருவும் ஏற்கவில்லை, சட்ட அமைச்சர் அம்பேத்கரும் ஏற்கவில்லை. 'எக்னாமிக்கலி' என்ற சொல்லைச் சேர்க்கலாம் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு ஆதரவாக 5 வாக்குகள் மட்டுமே பதிவானது. 'எக்னாமிக்கலி' என்ற சொல்லைச் சேர்க்கக்கூடாது என்று 243 வாக்குகள் விழுந்தது. இப்படி இந்திய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்து தான் பொருளாதார அளவுகோல்.

 

இன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனத்தில் மூன்று நீதிபதிகள் ஆதரித்துள்ளார்கள். ஆனால் 1992 ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளதை இந்த இடத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். சமூக நீதிக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மை அமர்வுக்கும் எதிரானது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடு என்பது. முன்னேறிய உயர்வகுப்பினருக்கு கிடைக்கும் உதவியைத் தடுப்பதாக யாரும் கருதத் தேவையில்லை. ஏழைகளுக்கான எந்தத் திட்டத்தையும் நாங்கள் தடுக்க மாட்டோம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதுதான் அண்ணா வகுத்துத் தந்த அறநெறி.

 

தமிழக அரசின் பெரும்பாலான சமூக நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுதான். இத்தகைய திட்டங்கள் குறிப்பிட்ட சாதி ஏழைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து ஏழை எளிய மக்களுக்கும்தான். அந்த வகையில் ஏழை மக்களின் வறுமையைப் போக்க மத்திய அரசு எந்த திட்டங்களைக் கொண்டுவந்தாலும் அதை ஆதரிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் சமூகநீதி கொள்கையை மடைமாற்றும் திருகு வேலையை இட ஒதுக்கீடு அளவுகோலாக மாற்றக் கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகோள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.