Skip to main content

ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் அதிமுக - திமுக இடையே வாக்குவாதம்! நாற்காலியை எடுத்து வீசியதால் பரபரப்பு!!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

Debate between AIADMK and DMK at the Panchayat Union Council meeting

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அவசரக் கூட்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையிலும், குழு துணைத்தலைவர் யாகப்பன் முன்னிலையிலும் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான 15வது நிதிக்குழு ரூபாய் ஒரு கோடியே 26 லட்சம் மத்திய அரசு நிதி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதற்கான ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றிய வார்டுகளுக்கும் பணிகள் தேர்வு செய்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் முறையாக விவாதம் நடத்தப்பட்டு ஒவ்வொரு கவுன்சிலர்களிடமும் விளக்கம் கேட்டு அதற்குரிய விளக்கமும் அளிக்கப்பட்டு கூட்டம் முடிவு பெற்றது. அப்போது ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் யாகப்பன் கூட்டம் முடிவடைந்துவிட்டதன் வாயிலாக இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மாற்று அணிக்கு மாற இருப்பது பற்றிய சந்தேகத்தைக் கேள்வியாக எழுப்பினார். அவ்வாறு இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மாற்றுக் கட்சிக்குச் செல்லவிருப்பதாக இருந்தால் இரட்டை இலையில் வெற்றி பெற்றதை ராஜினமா செய்துவிட்டு மாற்றுக் கட்சிக்குச் செல்லலாம் என ஒரு ஆதங்கத்தில் கூறினார்.

 

இதை அறிந்த பிள்ளையார் நத்தம் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் அதிவேகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு நாற்காலியைத் தூக்கி வீசினார். இதற்கு ஆதரவு தெரிவித்து சிலுக்குவார்பட்டி ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன் (பாமக) நாற்காலியைக் கூட்டத்தில் வீசினார். இதையறிந்த மற்ற அதிமுகவினர், இவ்வாறு செய்வது முறையற்றது என ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து கூட்டத்தைவிட்டு வெளியே வந்த திமுக கவுன்சிலர்கள் சிலர், “ஒன்றரை ஆண்டுகாலம் நடந்த திட்டப்பணிகளை அவ்வப்போது  நடந்த கூட்டங்களின் தீர்மானத்தில் வைக்காமல் அவசரக் கூட்டம் நடத்தி அனைத்தையும் ஒரே தீர்மானத்தில் கொண்டுவந்தது முறைகேடுகள் நடப்பதற்கு வழிவகை செய்யும். அதனால் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவரின் எதேச்சைய போக்கைக் கண்டிக்கிறோம். கூட்ட அரங்கில் வாக்குவாதத்தின்போது அதிமுக நிர்வாகிகள் சிலர் கூட்ட அரங்கின் உள்ளே புகுந்து தகராறில் ஈடுபட்டனர். அதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்’ என கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.