Skip to main content

“ஆயிரம் ரூபாய் செலவு செய்வதற்கு பதிலாக இங்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” - ஹசன் மெளலானா

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

Come here and get vaccinated instead of spending a thousand rupees - Hassan Moulana

 

நாடு முழுவதும் கரோனாவின் பரவல் அதிதீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பல மாநிலங்களும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து சில தளர்வுகளுடனான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தினக்கூலிக்கு வேலை செய்வோர், சாலையோர மக்கள், ஆதரவற்ற மக்கள் என பலரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடும் நேருக்கடியான சூழலை தமிழகம் சந்தித்துவந்தாலும் அரசின் முன்னேற்பாடுகள் பலரையும் கடும் பாதிப்புக்கு உள்ளாக்காமல் உதவியாக இருந்துவருகிறது. அதேபோல் கரோனாவில் இருந்து முழுமையாக நம்மை தற்காத்துக்கொள்ள அரசு மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்திவருகின்றனர். 

 

அரசியலைச் சார்ந்தவர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கும் செய்துவருகின்றனர். அந்த வகையில் ராஜீவ் காந்தியின் நினைவு தினமாக இன்று (21.05.2021) வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா வேளச்சேரி, கம்பர் தெரு, நேரு நகரில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, “வருங்கால பாரதத்தை வித்திட்டவர் அமரர் ராஜீவ் காந்தி. அதனடிப்படையில் 2021 வேளச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள்  என்னை வெற்றிபெற செய்துள்ளனர். இன்று எங்களது தலைவர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்தியுள்ளோம். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி 1 லட்சம் முகக்கவசம், ஆம்புலன்ஸ் ஆகியவற்றை உடனே தொகுதி மக்களுக்காக தயார் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

 

Come here and get vaccinated instead of spending a thousand rupees - Hassan Moulana

 

ஏற்கனவே ஸ்டிக்கர் ஒட்டாமல் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் பின்னர் தலைவர் சொல்லியதற்கிணங்க ஸ்டிக்கர் ஒட்டிய ஆம்புலன்ஸ் தயார்செய்துகொண்டிருக்கிறோம். அதேபோல் மக்களுக்கு உதவிசெய்யும் பணியில் காங்கிரஸ் கட்சியினர் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் உயிர்நீத்த ராஜீவ் காந்தி அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக இன்று காங்கிரஸ் மக்கள் பேரியக்கமாக மாறியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் தமிழகத்தில் பேரியக்கமாக ஆனதன் பின்பு கிடைத்த இந்த வெற்றியை தலைவர் ராஜீவ் காந்திக்கு சமர்ப்பிக்கிறோம். வேளச்சேரியைப் பொறுத்தவரையில் ப்ரமைரி ஹெல்த் சென்டர், கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் ஆகிய இரண்டின் மூலம் கரோனா முகாமை நாங்கள் நடத்திவருகிறோம். இந்தக் கரோனா முகாமின் மூலம் தினமும் 200 முதல் 300 பயணாளிகள் பயன்பெறுகிறார்கள். இதனை நாம் நேரடியாக அங்கு சென்று பார்த்தாலே தெரியும். தினமும் குறைந்த அளவான மக்களே வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள். 

 

அதனால் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மிகவும் முக்கியம். இன்னும் அதிக மக்கள் தடுப்பூசியை நம்பமால் உள்ளார்கள். எனவே தனியார் மருத்துவமனைக்குச் சென்று 1000 ரூபாய் செலவு செய்வதற்குப் பதிலாக, இதுபோன்ற உங்களது இடத்திற்கு அருகில் இருக்கும் தடுப்பூசி முகாமைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அரசு சார்ந்த இடங்களை நாங்கள் நன்கு பராமரித்து சுத்தமாக வைத்துள்ளோம். எனவே இங்கு வந்து கண்டிப்பாக அனைவரும் கரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன். முதல் அலையின்போது நாங்கள், அனைவருக்கும் கபசுரக் குடிநீர் கொடுத்தோம். ஆனால் இந்தக் கரோனா இரண்டாம் அலையானது, காற்றில் கூட தீவிரமாக பரவிவருகிறது. அதனால் சித்தா மருந்துகள் இருந்தால்கூட தடுப்பூசி மருந்து செலுத்திக்கொள்வது மிக அவசியமாயிற்று. எனவே கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.