Skip to main content

“இது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிக மோசமான தாக்குதல் ” - மல்லிகார்ஜூன கார்கே சாடல்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
This is the worst incident on Indian democracy Mallikarjuna Kharge

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் இன்று காலையில் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது. கடந்த 2018 - 2019 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அதோடு 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதற்காக ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவிக்கையில், “அதிகார போதை கொண்ட மோடி அரசு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிக மோசமான தாக்குதல். அரசியலைப்பு சட்டத்திற்குப் புறம்பாக நிதி வசூலித்து அதனை தேர்தலுக்கு பா.ஜ.க. பயன்படுத்துகிறது. ஆனால், மக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் முடக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள கட்சிகளின் அமைப்பையும், இந்தியாவின் ஜனநாயகத்தையும் நீதித்துறை பாதுகாக்க வேண்டும். இந்த எதேச்சதிகாரத்திற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி வலுவாகப் போராடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் செயல்பட தொடங்கியுள்ளன. 

சார்ந்த செய்திகள்