
ஜம்மு - காஷ்மீரின் பஹல்கம் எனும் பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் மீது நேற்று (22-04-25) பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பஹல்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்களை கண்டறிந்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர்
இதற்கிடையில், தாக்குதலின் போது பயங்கரவாதிகளின் நடவடிக்கை குறித்தும் அவர்கள் எப்படி தாக்குதல் நடத்தினார்கள் குறித்தும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பயங்கரவாத தாக்குதலில் கணவன் மஞ்சுநாத்தை இழந்த பல்லவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, ‘நாங்கள் பஹல்கம் பகுதியில் இருக்கிறோம். தாக்குதலால் என் கண் முன்னே எனது கணவர் இறந்து கிடக்கிறார். என்னால் அழ முடியவில்லை. என்ன நடந்தது என்று கூட எனக்குப் புரியவில்லை. நான் கர்நாடகாவின் சிவமோகாவில் இருந்து என் கணவர் மஞ்சுநாத் மற்றும் மகன் அபிஜேயாவுடன் இங்கு வந்தேன். மூன்றில் இருந்து நான்கு பயங்கர்வாதிகளை நான் கண்டேன். என் கணவர் கொல்லப்பட்ட பிறகு நான் ஒரு பயங்கரவாதியை எதிர்கொண்டு, ‘எனது கணவரை கொன்றுவிட்டாய், என்னையும் கொன்றுவிடுங்கள்’ என்றேன். எனது மகனும் அதையே சொன்னான். ஆனால், நான் உங்களை கொல்ல மாட்டேன். இதை போய் மோடியிடம் சொல் என்று அந்த பயங்கரவாதி சொன்னான்.
தாக்குதலின் போது பயங்கரவாதிகள் எங்கள் கண்முன்னே இருந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இல்லை. கிட்டத்தட்ட அனைத்து ஆண்களும் குறிவைக்கப்பட்டனர். புதுமணத் தம்பதிகள் பலர் இருந்தனர், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கணவர்கள் மட்டுமே தாக்கப்பட்டனர். பெண்கள், மற்றவர்களை மட்டும் அவர்கள் தாக்கவில்லை. இந்துக்கள் குறிவைக்கப்பட்டனர். சுமார் 500 சுற்றுலாப் பயணிகள் அங்கு இருந்தனர். நான் எனது கணவரின் உடலை எடுத்து கொண்டு தான் எனது சொந்த ஊருக்குச் செல்வேன். அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கண்ணீர் மல்க பேசினார்.