
மீனை திருடியதாகக் கூறி பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து ஊர் மக்கள் கொடூரமாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் மால்பே துறைமுகம் ஒன்று இருக்கிறது. இந்த பகுதியில், மீன் திருடியதாகக் கூறி பெண் ஒருவரை, மரத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘என்ன காரணமாக இருந்தாலும், ஒரு பெண்ணின் கையையும் காலையையும் கட்டி வைத்து தாக்குவது என்பது மனிதநேயமற்ற செயல். மேலும், இது கடுமையான குற்றமும் கூட. இது போன்ற காட்டுமிராண்டித்தனமான நடத்தை, கர்நாடகா போன்ற நாகரீக இடத்திற்கு தகாதது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனப் பதிவிட்டார்.
இதற்கிடையில், இந்த சம்பவத்தினால் கர்நாடகாவில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் கூறி ஆளும் காங்கிரஸ் அரசை பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.