
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கான டெண்டரை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றார் போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் எனப் பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் அதற்கேற்ப புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான முயற்சியில் பாஜக அரசு இறங்கியுள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்த புதிய கட்டிடம் கட்டப்படும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1,350 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கை வசதி செய்வதற்கு ஏற்றதாகவும், முக்கோண வடிவிலும் இந்த கட்டிடம் அமைய உள்ளதாக தெரிகிறது. இந்த புதிய நாடாளுமன்றத்தின் மாதிரி வரைபடங்களை அகமதாபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயார் செய்தது. இந்நிலையில், நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தத்திற்கான டெண்டரில் டாடா புரொஜெக்ட்ஸ் நிறுவனம், எல் அண்ட் டி உள்ளிட்ட பல முன்னணி இந்திய நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில், 861 கோடியே 90 லட்சத்துக்கு டெண்டர் கோரியிருந்த டாடா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.