Skip to main content

கேரள அரசின் அறிக்கையால் ரத்து செய்யப்பட்ட குடியரசு தலைவரின் பயணம்...

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

sdgd

 

 

சபரிமலையில் தற்போது மகர விளக்கு பூஜைகள் நடந்து வருகின்றன. வரும் ஜனவரி 15 ஆம் தேதி மகர ஜோதி தரிசனமும் மகர விளக்கு பூஜை வைபவமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மகர விளக்கு பூஜையில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 ஆம் தேதி சபரிமலை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. தனி விமானத்தில் கொச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை செல்லவிருப்பதாகவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கேரள அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு ராம்நாத் கோவிந்தை அழைத்து செல்வது குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேரள அரசு ஆலோசித்தது.அதன்படி நிலக்கல் அல்லது பாண்டி தாவளத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதியில் ஹெலிபேட் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியை ஆய்வு செய்த பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை தலைவர், ஹெலிபேட் அமைக்கும் அளவுக்கு நீர்த்தேக்க தொட்டி பலமானதாக இல்லை என கண்டறிந்தார். மேலும் அதிகளவிலான பக்தர்கள் நிலக்கல்லுக்கு வருவதால் அங்கே ஏற்கெனவே இருக்கும் ஹெலிபேடை உபயோகப்படுத்துவது சரியாக இருக்காது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டார். 

இதுகுறித்து ஆலோசித்த கேரள அரசு மற்றும் தேவஸம்போர்டு ஆகியவை குடியரசுத் தலைவருக்கு விரிவான அறிக்கையை அனுப்பியது. அதில் குறுகிய காலத்தில் குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராம்நாத் கோவிந்தின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்