கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. இங்கு 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்ள இந்த சிறை சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் இந்த சிறை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறையில் உள்ளவர்களுக்கு சிறை விதிகளை மீறி பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், செல்போன்கள் அதிகம் இருப்பதாகவும் பெங்களூரு மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பரப்பன அக்ரஹார சிறைக்கு இன்று அதிகாலை 5 மணி முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் செல்போன்கள் சிக்கியதாகவும், மேலும் பல பொருட்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் ஆகியோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்கிய அறைகளிலும் சோதனை நடத்தினர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நடந்த இந்த அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.