காற்று மாசில் தத்தளித்து வருகிறது டெல்லி. காற்று மாசுபாட்டின் தரக்குறியீடு 500க்கும் மேலிருந்தால் மிகவும் கடுமையான காற்று மாசு என அறியப்படும் நிலையில் ஆயிரத்தை எட்டுவது என்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காற்று மாசடைந்து புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் அந்த காற்று மாசுபாடு காரணமாக ஐந்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன் காற்றின் தரக்குறியீடு 300 முதல் 400 வரை இருந்து வந்த நிலையில் இன்று காற்றின் தரக்குறியீடு 800 முதல் 900 ஆக உள்ளது.

இது மிகவும் கடுமையான காற்று மாசு என்றும், சுவாசிக்க உகந்த காற்றே அல்ல என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், தலைவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு டெல்லி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே கடுமையாக காற்று மாசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வாகன போக்குவரத்தால் ஏற்படும் மாசை குறைக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லி விமான நிலையத்தை காற்றுமாசு சூழ்ந்துள்ளதால் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதேபோல் இன்று இந்தியா வங்கதேசம் இடையே நடைபெறும் 20 ஓவர் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் நிலையில் போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.