Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் 2வது நாளாக விசாரணை

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

Minister Senthil Balaji Case 2nd day of hearing in Supreme Court

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

 

முன்னதாக, செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும். எனவே செந்தில் பாலாஜி வழக்கின் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும் எனத் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்திருந்தார்.

 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் பிற்பகல் 2.15 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். மேலும் நீதிபதிகள் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்த பின் நாங்கள் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்போது இந்த வழக்கை முடித்து வைக்கலாமே எனக் கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்த வழக்கு நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் மதியம் 2  மணியளவில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டு வருகிறார். அப்போது அவர் வாதிடுகையில் காவல், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விஜய் மதன்லால் உத்தரவு தெளிவுபடுத்தியுள்ளது. அமலாக்கத்துறையினரைப் போலீஸ் அதிகாரிகளாகக் கருதினால் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கும் இருக்கும். எனவே போலீசாருக்கு உள்ள அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருந்தால் அது பி.எம்.எல்.ஏ. சட்ட விதிகளுக்குப் புறம்பானது” என வாதிட்டு வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்